மதுரையில் போலீஸ்- பொதுமக்கள் சரமாரி கல் வீசி தாக்குதல்- வெகுண்ட வைகை கரை!
மதுரை செல்லூரில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதையடுத்து பொதுமக்கள் போலீசார் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை: மதுரை செல்லூரில் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர். போலீசாரின் தாக்குதலை அடுத்து பொதுமக்களும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மதுரை வைகை ஆற்றின் பாலத்தின் இரு பக்கமும் போலீசாரும் பொதுமக்களும் ஒருவர் மீது ஒருவர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அங்கு போராட்டம் நடத்திய மக்களை கலைந்து போகச் சொல்லி போலீசார் கூறியதை அடுத்து அங்கு தாக்குதல் நடந்தது.
அந்த தாக்குதலின் ஒரு பகுதியாக பொதுமக்கள் போலீசார் மீது கால்வீசி , போலீசாரும் உடனே அதிக அளவில் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியே கற்கள் இறைந்து போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.
மேலும், காவல்துறையை சார்ந்தவர்கள் அங்கு தீ வைத்து பொதுமக்களை விரட்டி வருகின்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீண்டும் கல் வீசி தாக்கும் கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். மேலும், தற்போது பல்வேறு ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் புகுந்திருப்பதால் போராட்டக்காரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் போலீஸ் எச்சரிக்கைவிடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.