கொசுவலை தராததால் உண்ணாவிரதத்தில் குதித்த பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்
வேலூர்: கொசு வலை கேட்டும் அதை சிறை அதிகாரிகள் தராததால் கோபமடைந்த இந்து பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோர் சாப்பிட மறுத்து தட்டை தூக்கி எறிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்ததால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் பாஜக பிரமுகர் டாக்டர் அரவிந்த ரெட்டி, இந்து முன்னணி மாநில செயலாளர் வெள்ளையப்பன் உள்ளிட்ட சில இந்துப் பிரமுகர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பக்ருதீன், பில்லா மாலிக், பன்னா இஸ்மாயில். இவர்கள் 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இவர்கள் 3 பேரையும் கர்நாடக போலீசார் கடந்த 16-ந்தேதி பெங்களூர் அழைத்து சென்றனர். பின்னர் மீண்டும் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் ஆகியோர், தங்களை அடைத்து வைத்துள்ள அறையில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதாகவும். இதனால் தங்களுக்கு கொசுவலை ஏற்பாடு செய்து தரும்படியும் சில நாட்களாக கேட்டு வந்துள்ளனர். ஆனால் கொசுவலை தரமுடியாது என ஜெயிலர் கூறியுள்ளாராம்.
இதனைக் கண்டித்து 3 பேரும் நேற்று இரவு அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்தனர். மேலும் உணவு வைத்திருந்த தட்டை வீசி எறிந்துள்ளனர். அதேபோல் இன்று காலை வழங்கப்பட்ட உணவையும் அவர்கள் சாப்பிட மறுத்து உண்ணாவிரதம் இருந்தனர். இதனால் சிறையில் பரபரப்பு நிலவுகிறது.