24 மணி நேரமும் இருட்டறையில் அடைத்து சித்திரவதை.. மதுரை கோர்ட்டில் போலீஸ் பக்ருதீன் கதறல்
மதுரை பால்கடை சுரேஷ் கொலை வழக்கிலும் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நேற்று இருவரையும் வேலூர் சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் மதுரைக்குக் கொண்டு வந்து ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதியிடம் போலிஸ் பக்ருதீன் முறையிட்டார். அவர் கூறுகையில், என் உயிருக்கு வேலூர் சிறையில் ஆபத்து உள்ளது. என்னை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்றார். பின்னர் நீதிபதி விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மேலும் சிறை மாற்றம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு போலீஸ் பக்ருதீனுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிலையில் தனது தாயாரைச் சந்தித்துப் பேச அனுமதி கோரினார் பக்ருதீன். அதை ஏற்ற நீதிபதி 5 நிமிடம் அனுமதி அளித்தார். அதன் பிறகு பக்ருதீன் தனது தாயாரை சந்தித்துப் பேசினார்
பின்னர் பக்ருதீனையும், பிலால் மாலிக்கையும் போலீஸார் வெளியே அழைத்து வந்தனர். வேனில் ஏற்றப்பட்ட போது, வெளியில் நின்றிருந்த செய்தியாளர்களைப் பார்த்து பக்ருதீன் கூறுகையில், நான் நிரபராதி. எனக்கும் என் மீது போடப்பட்டுள்ள வழக்குகளுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மதுரை பால்கடை சுரேஷ் படுகொலை வழக்கிலும் எனக்கு சம்பந்தம் இல்லை.
வேலூர் சிறையில் என்னையும், பிலால் மாலிக்கையும் இருட்டு அறையில் வைத்துள்ளனர். 24 மணி நேரமும் இருட்டு அறையில் வைத்துள்ளனர். எங்களால் இந்த சித்ரவதையை அனுபவிக்க முடியவில்லை. போலீசார் நெருக்கடி கொடுக்கின்றனர். என் உயிருக்கு வேலூர் சிறையில் ஆபத்து உள்ளது என்று சத்தமாக கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலஸீார் வேகமாக அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டனர்.