காபிபோசா குற்றவாளி மூலம் சரணடைந்தாரா தீவிரவாதி போலீஸ் பக்ருதீன்?: பரபரப்பு தகவல்கள்
தமிழகத்தில் இந்து முன்னணி தலைவர் வெள்ளையப்பன், பாஜ தலைவர்கள் ஆடிட்டர் ரமேஷ், வேலூர் டாக்டர் அரவிந்த் ரெட்டி, மதுரையில் பால்காரர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பல அரசியல் படுகொலைகளில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் கடந்த வாரம் கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில், தலைக்கு ரூ5 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கண்டவுடன் சுடவும் என அரசு போட்ட உத்தரவே போலீஸ் பக்ருதீன் சரணடையக் காரணம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
முன்பொரு முறை கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது பழக்கமான கொடுங்கையூரைச் சேர்ந்த காபிபோசா குற்றவாளி சாகுல் அமீது(55) என்பவர் மூலம் தமிழகம் மற்றும் ஆந்திர போலீசாரைத் தொடர்பு கொண்ட போலீஸ் பக்ருதீன் சரணடையும் முடிவைத் தெரிவித்ததாக தெரிய வந்துள்ளது.
போலீஸ் பக்ருதீனின் சரணடையும் விருப்பத்தைக் கேள்விப்பட்ட தமிழக உளவுப் பிரிவு போலீசார், போலீஸ் பக்ருதீன் போலீஸ் நிலையத்துக்கோ, அதிகாரிகளின் அறைகளுக்கோ வந்து சரணடைய வேண்டாம். பெரியமேட்டுக்கு வரச்சொல்லுங்கள், நாங்கள் கைது செய்கிறோம் எனக் கூறியதாகவும், அதன்படியே பெரியமேட்டுக்கு வந்த போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
காபிபோசா குற்றவாளியான சாகுல் அமீது ஜாமீனில் வெளிவந்த போது தலைமறைவானவர். செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்ட அவர் மீதுசுங்கத்துறை அதிகாரிகள் காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். தற்போதும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சாகுல்ஹமீது கடந்த 2004ல் துபாய் தப்பிச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.