தஷ்வந்தின் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி போலீஸ் மனு.... தூக்கை எதிர்த்து கொடூரன் தஷ்வந்தும் மனு!
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்தின் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை : சென்னை போரூர் அருகே 7 வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி போலீஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று உடுமலை சங்கர் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரின் தூக்கையும் நிறைவேற்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.
சென்னை முகலிவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹாசினியை கொடூரன் தஷ்வந்த் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றான். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் ஜாமினில் வெளிவந்த 10 மாதங்களில் தனது தாயையும் கொன்றுவிட்டு தலைமறைவானான்.
குற்றவாளி தஷ்வந்த்தை மும்பையில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கு சென்னை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி தஷ்வந்த்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 30 சாட்சியங்கள், 19 பொருள் சார்ந்த ஆவணங்களின் அடிப்படையில் அவனை குற்றவாளி என்று அறிவித்தார்.
தஷ்வந்த்துக்கு மரண தண்டனை
மேலும் தஷ்வந்த்துக்கு 46 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. தனக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் தஷ்வந்த் கோரி இருந்தான்.
தண்டனையை எதிர்த்து மனு
இந்நிலையில் தஷ்வந்த் தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளான். தனக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று அவன் மனுவில் கோரியுள்ளான்.
போலீஸ் மனு
இதனிடையே தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப் படுகொலை விவகாரத்தில் திருப்பூர் நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 6 பேரின் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைகோர்ட் அனுமதி வேண்டும்
கீழ் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளை நிறைவேற்ற உயர்நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். இதன் அடிப்படையிலேயே இரண்டு வழக்குகளிலும் தண்டனையை நிறைவேற்ற அனுமதி கோரி மனு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.