சிலைக்கடத்தல்: டிஎஸ்பி காதர்பாட்ஷாவை 10 நாள் காவலில் எடுக்க போலீஸ் திட்டம் - கோர்ட்டில் மனு
சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம்: சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்பு கோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் ஆரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் பணியின் போது சிவன், பார்வதி பஞ்சலோக சிலை உள்ளிட்ட 6 சாமி சிலைகள் கிடைத்துள்ளன.
இந்த சிலைகளை தாசில்தாரிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக அதே ஊரை சேர்ந்த சந்தானம் என்பவருடன் சேர்ந்து சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய ஆரோக்கியராஜ் முயன்றுள்ளார். அந்த சிலைகளின் மதிப்பு சுமார் ரூ.20 கோடியாகும்.
இந்நிலையில், இந்த தகவல் வெளிவந்தவுடன் சிலைகளை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, உதவி ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் மற்றொரு கான்ஸ்டபிள் ஆகியோர், அந்த சிலைகளை வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சிலை கடத்தல்காரர்களிடம் ரூ.15 லட்சத்துக்கு அந்த சிலைகளை விற்றுள்ளனர் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய சுப்புராஜை போலீசார் கைது செய்த நிலையில், டிஎஸ்பியாக இருந்த காதர் பாட்ஷா தலைமறைவாக இருந்தார். 3 மாத காலம் தலைமறைவாக இருந்த காதர்பாட்ஷாவை கும்பகோணத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதியின் உத்தரவுப்படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாட்ஷாவை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிலைகடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.