திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சு… தடியடி.. பெண்கள், குழந்தைகள் பீதி
திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் குண்டு வீச்சை போலீசார் நடத்தியுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் உள்ள பெண்கள், குழந்தைகள் பீதி அடைந்துள்ளனர்.
சென்னை: திருவல்லிக்கேணியில் மீண்டும் கண்ணீர் புகை குண்டு வீச்சை போலீசார் நடத்தியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வருவோர் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். இதனால் இந்தப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
இன்று அதிகாலை முதல் சென்னை மெரினாவில் போராட்டம் செய்த மாணவர்களை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதில் இருந்து சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகள் போர் களம் போன்று சின்னாபின்னமாக காட்சியளிக்கிறது.
போராட்டத்தில் தொடர்ந்து நடத்த முயலும் மாணவர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். ஆனாலும் மாணவர்கள் அங்கேயே இருந்து போராடி வருகின்றனர். இதனிடையே, மர்ம நபர்கள் சிலர் ஐஸ் அவுஸ் காவல்நிலையத்தில் தீ வைத்துள்ளனர். இதனால் பெரும் பதற்றம் இப்பகுதியில் நிலவி வருகிறது.
இதனால், மீண்டும் கண்ணீர் புகை குண்டை போலீசார் வீசியுள்ளனர். மேலும், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அப்புறப்படுத்தி வருகின்றனர். கண்ணீர் புகை குண்டு வீச்சி, கல்வீச்சு, தடியடி என தொடர்ந்து நடைபெற்று வருவதால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் பீதியில் உள்ளனர். அனைவரும் வீட்டை தாழ் போட்டுக் கொண்டு வீட்டிற்குள் அச்சத்தோடு இருந்து வருகின்றனர்.