சிவகங்கை அருகே கோவில் திருவிழாவுக்கு எதிர்ப்பால் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூடு- 80 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டியில் கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இம்மோதல் தொடர்பாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டி கீழத்தெரு கிராமத்தில் ஒரு பிரிவினர் கோவில் திருவிழா நடத்தியுள்ளனர். இந்த திருவிழா அனுமதியின்றி நடத்தப்பட்டதாக மற்றொரு தரப்பினர் புகார் கூறி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மதகுபட்டி கிராமத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதகுப்பட்டியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது சிலர் போலீசார் மீது கல்வீசித் தாக்கியுள்ளனர். இதில் 8 போலீசார் படுகாயமடைந்தனர். இதனையடுத்து கூட்டத்தைக் கலைக்க தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. ஆனாலும் நிலைமை மோசமடைய போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
மேலும் மதகுபட்டியைச் சேர்ந்த 80 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அத்துடன் 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.