சுவாதி உயிரைக் குடித்தது ஒருதலைக்காதலா?- கொலையாளியை பிடிக்க 3 தனிப்படை!
சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று காலை இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே ஒரு தலை காதல் விவாகரத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சூளைமேடு, கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சந்தானகோபாலகிருஷ்ணன். இஎஸ்ஐ நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகள் சுவாதி, 24, இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இன்று காலை 6.30 மணியளவில் வேலைக்குச் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தார் சுவாதி. இரண்டாவது நடைமேடையில் ரயிலுக்காக காத்திருந்த போது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் நேராக சென்று சுவாதிடம் பேச்சு கொடுத்தார். சில நிமிடத்திலேயே இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
சுவாதி கோபத்துடன் ஏதோ பேசிவிட்டு அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றார். அந்த நபர், உடனே தன் பையில் மறைத்து வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து திடீரென சுவாதியை வெறிபிடித்தவர் போல வெட்டியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடூர மரணம்
சுவாதியின் முகத்திலேயே வெட்டு விழுந்ததில் பற்கள் பிளாட்பாரத்தில் சிதறிக் கிடந்தன. இது தவிர உடலில் பல இடங்களிலும் வெட்டு விழுந்தது. மர்ம நபரின் கொலை வெறி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமலேயே சுவாதி, ரத்த வெள்ளத்தில் பிளாட்பாரத்திலேயே சடலமானார். அதன்பிறகே மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார்.
பட்டப்பகலில் படுகொலை
ஆள் நடமாட்டம் உள்ள, நெரிசல் மிகுந்த முக்கியமான ஒரு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு சில மணித் துளிகளிலேயே தப்பியோடியுள்ளான். ரயில் நிலையத்தில் யாருமே கொலை செய்தவனை தடுக்கவில்லை, தாக்கி பிடிக்கவில்லை. அதற்கு மாறாக பலரும் கொலையைப் பார்த்து சிதறி ஓடியுள்ளனர்.
ரத்த வெள்ளத்தில் சுவாதி
என்ன நடந்தது என உணர்வதற்குள்ளேயே அவன் தப்பித்து ஓடிவிட்டான் என கூறுகின்றனர் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள். 7.30 மணிக்கு படுகொலை நடந்தும் 8.30 மணி வரையிலும் சுவாதியின் உடல் ரத்த வெள்ளத்தில் ரயில் நிலையத்திலேயே கிடந்தது.
தந்தை கதறல்
காவல் துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதிலும் மெத்தனம் காட்டியதாக கூறப்படுகிறது. காலையில் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் தனது இரு சக்கர வாகனத்தில் ரயில் நிலையத்தில் இறக்கி விட்ட சில நிமிடங்களிலேயே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது அவரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரயில் நிலையத்தில் அவரது தந்தை கதறி அழுத காட்சி ரயில் பயணிகளிடம் அழுகையையே வரவைத்தது.
ஒருதலைக்காதல்
இதனையடுத்து சுவாதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் சுவாதியின் பேக்கையும், அவரது கைப்பேசியையும் கைப்பற்றிய காவல் துறையினர் சுவாதி கடைசியாக பேசிய அவரது ஆண் நண்பரை வரவழைத்து அவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஒருதலைக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தெரிய வருகிறது.
செல்போன் ஆய்வு
கொலைக் குற்றவாளி சுவாதிக்கு தெரிந்த நபர் என்பதால், அவரைப் பற்றி சுவாதியின் உறவினர்கள் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றும் நெருங்கிய நண்பர்களிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், சுவாதியின் செல்போனில் இருந்து எந்தெந்த எண்களுக்கு பேசப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் விசாரணை நடத்தி, விரைவில் குற்றவாளியை கைது செய்வோம் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காண்பதில் சிக்கல்
இந்த சம்பவம் நடந்த நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தின் இரண்டாவது நடைமேடையில் சிசிடிவி கேமரா இல்லை. கொலையாளி பச்சை நிற டி சர்ட் அணிந்து வந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தாலும் கொலையாளியை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தனிப்படை அமைப்பு
காலை நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்திருந்த ரயில் நிலையத்தில் நடந்த இந்தக் கொலை சம்பவம் பெண்களின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. கொலையாளியை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.