ஐடி நிறுவனங்களில் இரவில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு: கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு
சென்னை: சென்னை அருகே, மென்பொருள் நிறுவன பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, சென்னையில், ஐடி நிறுவனங்களில் பணியாற்றும், பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி, சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
சாப்ட்வேர் நிறுவனங்களில் இரவு பணி செய்து விட்டு, வீடு திரும்பும் பெண்களுக்கு, போதுமான பாதுகாப்பு இருப்பதில்லை. அவர்கள் வீடு திரும்பும் வழியில் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே உள்ளது.
பெங்களூர், டெல்லியில் இரவு பணிமுடிந்து வீடு திரும்பிய பெண் ஊழியர்கள் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டனர்.
தற்போது சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சிறுசேரியில், உமாமகேஸ்வரி என்ற பெண் சாப்ட்வேர் நிறுவன என்ஜீனியரும் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு
இந்த சம்பவங்களை தொடர்ந்து சென்னையில், சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இரவுப் பணியில்
டெல்லி, பெங்களூரில் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்த போதே, சென்னையில் இரவுப்பணி செய்து விட்டு, வீடு திரும்பும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்
பொதுவாக சாப்ட்வேர் நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் வாசல், வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கேமரா பொருத்த வேண்டும்.
வீடு திரும்பும் போது
இரவில் பணி முடிந்து வீடு திரும்பும், பெண் ஊழியர்களை உரிய வாகனத்தில், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து அனுப்ப வேண்டும். பெண் ஊழியர்களை அழைத்து செல்லும் வாகன டிரைவருக்கு உரிய அடையாள அட்டை கொடுக்க வேண்டும். டிரைவர் நேர்மையானவரா? என்பது தொடர்பாக போலீஸ் மூலம் விசாரித்து, அதன் பிறகே பணி அமர்த்திட வேண்டும்.
நிறுவனங்கள்தான் பொறுப்பு
பெண் ஊழியர்கள், பணி முடித்து விட்டு, வீடு திரும்பும் வரை, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களே பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை
தற்போது மீண்டும், இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட, சாப்ட்வேர் நிறுவனங்களை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் காணாமல் போனதாக கொடுக்கப்படும் புகார்கள் மீது, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கவும், உரிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.