உமாமகேஸ்வரி கொலை: இரவில் பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பு தர ஐஜி மஞ்சுநாதா உத்தரவு
கேளம்பாக்கத்தை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் பொறியாளர் உமாமகேஸ்வரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதர் பகுதியில் கழுத்து அறுபட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த படுகொலை சம்பவம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் பெண் பொறியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்ததோடு, தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இந்நிலையில், ஐடி நிறுவனங்கள், காவல் துறையினர் இணைந்து மென்பொருள் நிறுவன பகுதிகளில் பாதுகாப்பு மேம்படுத்துவது குறித்த ஆலோசணை கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது.
இதில் வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியமூர்த்தி, காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாமல்லபுரம் டி.எஸ்.பி. மோகன் மற்றும் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய வடக்கு மண்டல ஐ.ஜி. மஞ்சுநாதா கூறியதாவது:
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் இரவு 8 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பும்போது அவர்களை தனியாக வீட்டுக்கு அனுப்பக்கூடாது. அந்நிறுவன வாகனத்தில் அவர்களை வீட்டுக்கு கொண்டு போய் விட வேண்டும். அந்த வாகன ஓட்டுனர்களின் முழு விவரங்களையும் மென்பொருள் நிறுவனங்கள் சேகரித்து வைத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்புக்காக சிப்காட் மென்பொருள் நிறுவன சங்கம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். மேலும் சிப்காட் வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, இருட்டாக உள்ள பகுதியில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நடமாடும் நபர்களை கண்காணித்து காவல் துறைக்கு அவர்களை பற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். உடனடியாக அப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்த வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
காவல்துறையினருடன் இணைந்து தாங்கள் பாதுகாப்பை பலப்படுத்த உறுதுணையாக இருப்பதாகவும், ரோந்து செல்லும் நேரங்களில் காவல்துறையினருக்கு வாகன வசதி செய்து தருவதாகவும் மென்பொருள் நிறுவன உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.