கொடநாடு கொள்ளை: எஸ்டேட் பங்களா பணிப்பெண்களிடம் போலீஸ் விசாரணை
கொடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக ஜெ., சசிக்கு உதவியாளராக இருந்த பங்களா பணிப்பெண்களை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி: கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியை கொன்று விட்டு பணம், நகை, ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக விசாரிக்க மேலும் இரு பணிப்பெண்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி நுழைந்த மர்ம ஆசாமிகள் காவலாளி ஓம்பகதூரை கொன்றுவிட்டு சில பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
டிரைவர் மரணம்
கொலையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். கனகராஜின் நண்பர் சயன் விபத்தில் சிக்கி கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடரும் விசாரணை
இந்த கொலை மற்றும் கொள்ளச் சம்பவம் தொடர்பாக 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பலரை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் சயனிடம் பலமுறை விசாரித்துள்ளார் நீலகிரி மாவட்ட எஸ்.பி முரளி.
மாயமானது என்ன?
பங்களாவில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளில் கோடிக்கணக்கான ரூபாய் இருந்ததா? உடைக்கப்பட்ட 3 சூட்கேஸ்களில் சொத்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என்று கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியில் போலீசார் இறங்கி உள்ளனர்.
பணிப்பெண்களிடம் விசாரணை
இதுதொடர்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அடுத்தக்கட்டமாக ஜெயலலிதா, சசிகலா ஆகியோரிடம் நீண்ட காலமாக வேலை பார்த்து வந்த பணிப்பெண்கள் இருவரையும் நேரில் வரவழைத்து விசாரணை நடத்திய போலீசார் இன்று அவர்களை கொடநாடு பங்களாவுக்குள் அழைத்து செல்ல உள்ளனர்.
மாயமானது என்ன?
பங்களாவில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோரது அறைகளில் என்னென்ன பொருட்கள் இருந்தது? தற்போது அவை அங்கு இருக்கிறதா? ஏதேனும் பொருட்கள் மாயமாகி இருக்கிறதா? என்று அவர்களிடம் விசாரிக்க உள்ளனர். கொடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்று சசிகலா வாயை திறந்தால் மட்டுமே மர்மம் விலகும் என்கின்றனர் எஸ்டேட் பணியாளர்கள்.