போலீஸ் கஸ்டடியில் பச்சமுத்துவிடம் கிடுக்குப் பிடி விசாரணை- மீண்டும் சிறையில் அடைப்பு!!
சென்னை: ரூ75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவை இன்று கஸ்டடியில் வைத்து போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் 5 பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தை தன்னுடைய லெட்டர் பேடில் எழுதி வைத்துவிட்டு கடந்த மே மாதம் 27-ந் தேதி மாயமானார். அவர் எங்கிருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
மதன் மற்றும் அவரது கூட்டாளிகள் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 112 பேர் கொடுத்துள்ள புகாரில் ரூ.75 கோடி மோசடி செய்திருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதன் எழுதியிருந்த கடிதத்தில் தான் வாங்கிய பணத்தை எஸ்.ஆர்.எம். குழுமத் தலைவர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து பச்சமுத்து மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி பச்சமுத்து கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி பச்சமுத்து தாக்கல் செய்த மனு சைதாப்பேட்டை 11-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் நாளைக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
மாணவர்கள் அளித்த பண மோசடி குறித்தும், மாயமான மதன் குறித்தும் பச்சமுத்துவிடம் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, பச்சமுத்துவை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பிரகாஷ், பச்சமுத்துவை 1 நாள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார்.
இதன்படி இன்று காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பச்சமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மாயமான மதன் எங்கே இருக்கிறார்? என்பது உட்பட ஏராளமான கேள்விகள் பச்சமுத்துவிடம் கேட்கப்பட்டது. இதன் பின்னர் பச்சமுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.