எஸ்.வி.சேகரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும்.. தமிழிசை பேட்டி
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட எஸ்.வி.சேகரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்ட எஸ்.வி.சேகரை போலீஸ்தான் கைது செய்ய வேண்டும் என்று தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியனின் கன்னத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தட்டிக் கொடுத்தது சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் இழிவுபடுத்தி ஒரு பதிவை தமது சமூக வலைதளத்தில் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்பதிவு தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சென்னை போலீசாரும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து எஸ்.வி.சேகர் தலைமறைவானார். அத்துடன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஜாமீன் வழங்கவில்லை. அத்துடன் அவரை கைது செய்யலாம் என்றும் கூறியது.
ஆனால் எஸ்.வி சேகர் இன்னும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். சுமார் 50 நாட்களாக அவர் கைது செய்யப்படாமல் இருக்கிறார். தமிழக போலீஸ் இதில் நடவடிக்கையே எடுக்கவில்லை.
இதுகுறித்து தமிழ் மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியளித்துள்ளார்.
அதில் எஸ்.வி சேகரை கைது செய்ய காவல்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.காவல்துறைதான் புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர் மீது நடவடிக்கை எடுக்க கட்சி தலைமைக்கு பரிந்துரைத்தோம். எங்கள் சார்பில் ஏற்கனவே அவர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டோம், என்றுள்ளார்.