சென்னை அருகே பீதி கிளப்பிய ஆட்டோ ரேஸ்.. 15 கி.மீ விரட்டி சென்று, சினிமா பாணியில் மடக்கிய போலீஸ்
Recommended Video
சென்னை: வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் ஆட்டோ ரேஸ் நடத்தியவர்களை 15 கி.மீ தூரம் சினிமா பாணியில், விரட்டி சென்று போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நள்ளிரவு நேரங்களில் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பைக் ரேஸ் நடத்தும் சம்பவங்களை அடிக்கடி பார்த்திருப்போம். சமீபத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கிரீன்வேஸ் இல்லம் அருகே, பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், சென்னை அருகே ஆட்டோ ரேஸ் நடத்தியவர்களை போலீசார் விரட்டி பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புற நகரில் ரேஸ்
பைக் மற்றும் ஆட்டோ ரேஸ் என்பது பீச் மற்றும் பெசன்ட் நகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது. அங்கு காவல்துறை கிடுக்கிப்பிடி அதிகரித்துள்ளதால், மதுரவாயல் பைபாஸ், மீஞ்சூர்-வண்டலூர் 400 அடி சாலையில் ஆட்டோ, பைக் ரேஸ் அதிகரித்துவிட்டது. இதையடுத்து ஆன்டி பைக் ரேஸ் பிரிவு என்ற ஒன்றை போலீசார் உருவாக்கியுள்ளனர். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை இன்ஸ்பெக்டர் ரவிகுமார் தலைமையில் மேற்கு மண்டல பகுதிகளை கண்காணித்து வருகிறது.
விரட்டிய போலீஸ்
இந்த நிலையில், இன்று போலீசார், மீஞ்சூர்-வண்டலூர் சாலையில் ஆட்டோ ரேஸ் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனங்களில் அவர்களை விரட்டினர். இதை பார்த்தும் ஆட்டோ ரேசில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை நிறுத்தவில்லை. எனவே போலீசார் சுமார் 15 கி.மீ தூரத்திற்கு ஆட்டோக்களை போலீசார் வாகனங்களில் விரட்டிச் சென்றனர். பூவிருந்தவல்லி அருகே, போலீசார் இந்த ஆட்டோக்களை மடக்கினர். 6 ஆட்டோக்கள், 1 டூவீலர்களை பறிமுதல் செய்த போலீசார் ரேசில் ஈடுபட்ட நால்வரை கைது செய்துள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
இவர்கள் அளித்த தகவலின்பேரில் புதுப்பேட்டை மற்றும் சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த தலா ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள். கடந்த வாரம் சென்னை வெளிவட்ட சாலையில் ஆட்டோ ஓட்டுநர், ஹேண்டில்பாரை பிடித்து தலைகீழாக ஆட்டோவை ஓட்டுவது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து போலீசார் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மக்கள் பீதி
போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் இதுபோன்ற ரேஸ்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். காவல்துறை நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.