துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட பழைய 500,1,000 ரூபாய் நோட்டுகள்.. வாணியம்பாடியில் பரபரப்பு
வாணியம்பாடியில் செல்லாததாக அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி மூட்டைகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, பாலாற்று மேடு பகுதியில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக வெட்டி மூட்டைகளில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி புழக்கத்திலிருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி தொலைக்காட்சி வாயிலாக அறிவித்தார். மேலும் நவம்பர் 10ம் தேதி முதல், வங்கி கணக்கில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்ற வாய்ப்பையும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தங்களிடம் உள்ள பணத்தை பொது மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்து வந்தனர். பல்வேறு இன்னல்களுக்கு இடையே பணத்தை டெபாசிட் செய்வதற்கும், பணத்தை எடுப்பதற்கும் வங்கிகளுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். ஏடிஎம்களிலும் போதுமான பணம் நிரப்படாததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சில இடங்களில் பணம் எடுக்க வங்கி, ஏ.டி.எம். வரிசையில் காத்திருந்தவர்கள் மயங்கி விழுந்தனர். ஒருசிலர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. காலக்கெடுவை கடந்த பிறகு, செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்து இருந்தால் சட்ட விரோதம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, பாலாற்று மேடு என்ற பகுதியில் இன்று காலை அப்பகுதி மக்கள் சென்றனர். பாலாற்றில் ஏராளமான மூட்டைகள் கிடந்தன. இது குறித்து, டவுன் போலீசுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.
விரைந்து வந்த போலீசார், மூட்டைகளை பிரித்து பார்த்தபோது, செல்லாது என அறிவித்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக வெட்டி அடைக்கப்பட்டு வீசப்பட்டு இருந்தது தெரியவந்தது. மொத்தம் 4 மூட்டைகளில் இருந்த செல்லாத ரூபாய் நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாலாறு பகுதியை ஒட்டி உள்ள ஒரு கம்பெனிக்கு சேலத்தில் இருந்து நேற்று லாரியில் சிமெண்ட் சீட், கண்ணாடி பொருட்கள் ஏற்றி வரப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் சேத மடையாமல் இருப்பதற்காக அடியில் மூட்டைகள் வைக்கப்பட்டன.
கம்பெனியில் லோடு இறக்கப்பட்ட பிறகு, மூட்டைகள் அனைத்தும் அருகே பாலாற்றில் வீசப்பட்டுள்ளது. அந்த மூட்டைகளில் தான் பழைய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மூட்டைகளில் ஓட்டை இருந்ததால் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட பணம் காற்றில் பறந்தது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கம்பெனி நிர்வாகத்திடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.