கலவரத்தை தூண்டினால் கம்பி எண்ண வேண்டியதுதான்.. முன்னாள் மாணவர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
கலவரத்தை தூண்டும் முன்னாள் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: கலவரத்தை தூண்டும் முன்னாள் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் சென்னையில் கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே கொண்டாட்டத்தில் ஈடுபட மாணவர்கள் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து பேருந்து மற்றும் ரயில்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 50 மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர்.
நேற்று முன்தினம் கைது
பைகளில் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை வைத்திருந்த 2 கல்லூரி மாணவர்கள், 3 முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
சிறையில் அடைப்பு
அமைந்தகரை பகுதியில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதான 8 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நேற்று முதல் விடுமுறை
நேற்றும் சென்னையில் உள்ள கல்லூரிகளின் வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மாநில கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் 2 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
மோதல் ஏற்படாமல் இருக்க
இந்நிலையில் கூடுதல் கமிஷனர் சாரங்கன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் உள்ள கல்லூரிகளில் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் மாணவர்கள் அமைதியாக வந்து பாடங்களை கற்று செல்ல வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள்-பொதுமக்களிடையே மோதல் சம்பவங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காகவும், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
கத்தி கலாச்சாரம்
மாணவர்கள் பயணிக்கும் பஸ்கள் மற்றும் ரயில்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். கல்லூரிகள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் முன்னிலையில் கல்லூரிக்குள் செல்லும் மாணவர்களிடம் சோதனை நடத்தப்படும். கல்லூரிக்குள் கத்தி கலாசாரத்தை புகுத்தி மாணவர்களிடையே குழப்பத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குண்டர் சட்டத்தில் கைது
முன்னாள் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்குள் செல்ல அனுமதியில்லை. முன்னாள் மாணவர்கள் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறார்கள். கலவரத்தை தூண்டும் முன்னாள் மாணவர்கள் மீது தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
யார் கலவரத்தை தூண்டுகிறார்கள்?
முன்னாள் மாணவர்கள் யார்? கலவரத்தை தூண்டும் செயல்களில் யார் ஈடுபடுகிறார்கள் என்பது பற்றிய பட்டியலை சேகரித்து வருகிறோம். அதுபோல, தற்போது படிக்கும் மாணவர்கள் யார்? யார்? தவறான வழிக்கு செல்கிறார்கள் என்பது பற்றியும் ஆய்வு செய்து வருகிறோம்.
அனுமதிக்க முடியாது
இனிமேல் சென்னை நகரில் உள்ள கல்லூரிகளில் கத்தி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது. மேலும் கல்லூரிகள் அமைதியாக செயல்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கூடுதல் கமிஷனர் சாரங்கன் தெரிவித்தார்.