கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸ்காரர் கொலை.. கொள்ளையன் மாரடைப்பில் சாவு! ஒசூரில் பதற்றம்
ஒசூர்: ஆசிரியையிடம் செயின் வழிப்பறி செய்த கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற போலீஸ் ஹெட்-கான்ஸ்டபிளை கத்தியால் குத்தி கொள்ளையர்கள் தப்பியோடினர். சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கொள்ளையர்களில் ஒருவன், ஒசூர் காவல் நிலையத்தில் மாரடைப்பால் மரணமடைந்தான். அடுத்தடுத்த சம்பவங்கள் ஒசூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள சினிகிரிப்பள்ளி கிராமத்திலுள்ள அரசு தெலுங்கு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் பார்வதி. 7 மாத கர்ப்பிணியான இவர் நேற்று மாலை பணி முடிந்து உத்தனப்பள்ளி என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது டூவீலரில் வந்த கொள்ளையர்கள் பார்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கதாலி மற்றும் செயினை பறித்துச் சென்றனர். அதிர்ச்சியடைந்த பார்வதி, கத்தி கதறினார். தகவல் அறிந்த உத்தனப்பள்ளி போலீசார், வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
விசாரணையை தொடர்ந்து, கொள்ளையர்கள் இருசக்கரவாகனத்தில் உத்தனப்பள்ளியிலிருந்து ஒசூர் நோக்கிச் செல்வது குறித்து ஒசூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து ஒசூரில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஹெட்-கான்ஸ்டபிள் முனுசாமி மற்றும் கான்ஸ்டபிள் தனபால் ஆகிய 3 பேரும் ஒசூர்-ராயகோட்டை சாலையில் வழிப்பறி கொள்ளையர்களை கண்காணித்து வந்தனர்.
அப்போது கொள்ளையர்கள் ஒசூர் பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு தெருவில் நுழைவதை பார்த்து போலீசார் விரட்டி சென்றனர். போலீசாரிடம் பிடிபட்டுவிட கூடாது என்பதற்காக, கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தங்களை பிடிக்க வந்த 3 போலீசாரை சரமாரியாகக் குத்தினர்.
இதில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் ஹெட்-கான்ஸ்டபிள் முனுசாமி இருவருக்கும் வயிற்றுப் பகுதியில் கத்திக்குத்து விழுந்தது. காவலர் தனபாலுக்கு கைகளில் கத்தி குத்து விழுந்தது.
போலீசார் காயம், வலியோடு போராடிய நேரத்தில், போலீஸாரின் பிடியிருந்து கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். இந்நிலையில், காயமடைந்த 3 போலீஸாரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு ஒசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் உயரதிகாரிகள் அவர்களை பார்த்து ஆறுதல் கூறினர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹெட்-கான்ஸ்டபிள் முனுசாமி சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் பெங்களூர் கே.ஆர்.புரத்தை சேர்ந்த கொள்ளையன் புஜ்ஜிபாபு போலீஸ் பிடியில் சிக்கினான். முனுசாமி உயிரிழந்த தகவல் வெளியான சில மணி நேரத்திற்குள், காவல் நிலையத்தில் அந்த புஜ்ஜிபாபு மாரடைப்பால் மரணமடைந்ததாக போலீசார் அறிவித்தனர்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பிற கொள்ளையர்கள் பெங்களூருக்குள் நுழைந்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க ஒசூர் போலீசார் பெங்களூரில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இந்தச் சம்பவம் ஒசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.