என்ன கொடுமை சார் இது.. ஏட்டுக்கு 10 நாள் லீவு கொடுக்க ரூ.2000 லஞ்சம்! இன்ஸ்பெக்டர் கைது
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள ஏட்டுவிடம் விடுமுறை வழங்க ரூ.2000 லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவர் தமிழ்நாடு சிறப்புக்காவல் படையில் இருந்து சமீபத்தில் ஏட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். வேலூர் மத்திய சிறையில், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையில் பாதுகாப்புப் பணியில் இவர் தற்போது ஈடுபட்டு வருகிறார்.
திருமூர்த்தி, தனது தந்தைக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் 10 நாட்கள் லீவு வேண்டும் என இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரோ ஒரு நாள் லீவுக்கு 200 என்ற வீதத்தில் 10 நாட்களுக்கு ரூ.2,000 லஞ்சம் தந்தால் தான் லீவு கொடுப்பேன் என்று கூறியுள்ளாராம். திருமூர்த்தி ரூ.1500 தருவதாக ஒப்புக் கொண்டுள்ள நிலையிலும், பன்னீர்செல்வம் ரூ.2,000 கொடுத்தால் தான் லீவு வழங்கப்படும் என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த திருமூர்த்தி இது தொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் திட்டத்தின்டி, நேற்று காலை ரசாயனம் தடவப்பட்ட ரூ.2,000 பணத்தை இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம், திருமூர்த்தி வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஏடிஎஸ்பி பால சுப்பிரமணியம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.