உனக்கு ஒன்னும் கிடைக்காது.. குறி சொன்னவரை சரமாரியாக செருப்பால் அடித்த எஸ்ஐ.. மக்கள் ஷாக்!
சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வயதானவரை செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பரமக்குடி: முனியசாமி.
பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் காவல்நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஒரு தனி டைப் ஆள். அதற்கு ஒரு உதாரணம் என்ன தெரியுமா?
கடந்த ஆண்டு பரமக்குடியில் ஒரு கோயில் விழா நடைபெற்றது. அப்போது விழா பாதுகாப்புக்காக முனியசாமி அங்கு வந்திருந்தார். கோயில் விழா என்பதால் பக்தி பாடல்களுடன் பாட்டு கச்சேரி நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பாதுகாப்புக்கு போன முனியசாமி, என்ன செய்தார் தெரியுமா? திடீரென்று கச்சேரி மேடையில் போலீஸ் உடையுடன் ஏறி, மைக்கை பிடித்து சினிமா துள்ளல் பாடல்களை பாட ஆரம்பித்துவிட்டார்.
இந்த சம்பவம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டதுடன், அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் சங்கடத்தையும் கொடுத்தது.
சரி இப்போது இது விஷயமல்ல. முனியசாமி கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்த வேறு சம்பவம் இது!
ஜோசியத்தில் அதிக நம்பிக்கை
முனியசாமிக்கு, ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு. இதனால் கோயில்-குளம் என்று சுற்றிக் கொண்டு இருப்பாராம். மேலும் ஜோசியத்திலும் முனியசாமிக்கு அதிக நம்பிக்கை உள்ளதால், யார் எங்கே ஜோசியம் சொன்னாலும் அங்கு போய் உட்கார்ந்துகொண்டு, தனக்கான பலனை பார்த்துவிடுவாராம். அதுமட்டுமா... குறி கேட்பது என்றால் அலாதி பிரியமாம். அதிலும் வயதானவர்கள் குறி சொன்னால், தன்னிலை மறந்து அங்கு போய் ஆஜராகிவிடுவாராம். தனக்கு சாதகமாக யாராவது குறி சொன்னால் முனியசாமி உச்சிமகிழ்ந்து போவாராம். அதுவே எதிராக சொல்லிவிட்டால், குறி சொல்பவர் கதி அதோகதிதான்!
கேள்வி மேல் கேள்வி
கடந்த சில தினங்களுக்கு பரமக்குடி டவுன் பகுதியில் வயதானவர் ஒருவர் குறி சொல்லிக் கொண்டிருந்தார். இது முனியசாமி கண்ணில் பட்டுவிட, அடுத்த வினாடியே அங்குபோய் நின்றார். அந்த பெரியவரிடம் கையை நீட்டிய முனியசாமி, "நான் இன்னும் கொஞ்சம் நாளில் ஓய்வு பெற போறேன்.. எனக்கு பணி சம்பந்தமாக வரவேண்டிய பணமெல்லாம் சரியாக வந்துவிடுமா? அதற்கு பிறகு என் எதிர்காலம் எப்படி இருக்கும்" என்று கேள்விமேல் கேள்வி கேட்டார். அதற்கு அந்த வயதான குறி சொல்வரும், முனியசாமியின் கையை பார்த்துவிட்டு, "ம்ஹும்... ஒன்னும் கிடைக்காது... நிலைமை கொஞ்சம் சிக்கலாதான் இருக்கும், நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஈசியா எதுவும் நடக்காது" என்றார்.
அலறி அடித்து ஓடிய முதியவர்
அவ்வளவுதான் முனியசாமி! ஆத்திரம் உச்சிக்கு சுர்ரென்று ஏறியது. வயதானவர் என்றும் அந்த குறி சொன்னவரை பார்க்காமல், தன்னுடைய செருப்பை கழட்டி சரமாரியாக அடிக்க தொடங்கிவிட்டார். போலீஸ்கார முனியசாமியின் அடியின் வலி தாங்க முடியாமல் அந்த பெரியவர் அலறி அடித்து கொண்டு ஓடினார். இதனையெல்லாம் அங்கிருந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சிலர் இதனை தங்களது செல்போனில் படம் பிடிக்க தொடங்கிவிட்டனர். எல்லோரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர, ஒருவரும் முனியசாமியை தடுக்க முன்வரவில்லை. அத்துடன் இந்த காட்சிகளையெல்லாம் சமூகவலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். வயதானவர் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக ஆத்திரம் தீர தாக்கிய முனியசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்துக்களையும் பதியவிட்டு வருகின்றனர். மேலும் இது சம்பந்தமாக தற்போதுதான் முனியசாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முனியசாமிக்கு கடும் கண்டனம்
இதுபோன்று அதிகார துஷ்பிரயோகம் செய்யும் போலீஸ்காரர்கள், ஒட்டுமொத்த காவல்துறைக்கும் களங்கத்தை ஏற்படுத்துகின்றனர். அத்துமீறல் மற்றும் சட்ட மீறல்களிலும் ஈடுபடும் ஒரு சில போலீஸாரால் பொதுமக்கள் காவல்துறையின் ஒட்டுமொத்த வெறுப்பின் உச்சத்துக்கே போய்விடுகிறார்கள். சப்-இன்ஸ்பெக்டர் முனியசாமி மீது நடவடிக்கை எடுப்பது இருக்கட்டும்... முதலில், 'காவல்துறை உங்கள் நண்பன்' என்ற வாசகத்தின் அர்த்தத்தை முனியசாமிக்கு, அவர் பதவி ஓய்வு பெறும் முன்னேயாவது உயரதிகாரிகள் யாராவது எடுத்து சொல்வார்களா?