"ஆறுச்சாமி" டயலாக்கை பேசி தொழிலதிபரிடம் பணம் பறித்த இன்ஸ்பெக்டர்.. துணை நடிகை உள்பட 3 பேருக்கு வலை
சென்னை: சென்னை தாம்பரம் அருகே தொழிலதிபரின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த காவல் ஆய்வாளர், துணை நடிகை சஜிதா உள்பட 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
தாம்பரம் இரும்புலியூர் மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் முத்தையா(74). இவர் அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டுமான பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 30-ம் தேதி இரவு, ஆய்வாளர் தாம்சன், துணை நடிகை சஜினி, அவரது விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியும் சஜிதாவின் கணவருமான பாண்டியன் ஆகிய 3 பேர் அத்துமீறி இவரது வீட்டுக்குள் நுழைந்தனர்.
முத்தையாவின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பணம் இல்லையென கூறியதும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதைத் தொடர்ந்து போலீஸ்காரராகிய நீங்களே இப்படி செய்யலாமா என முத்தையா கேட்டுள்ளார். அதற்கு தாம்சனோ நடிகர் விக்ரமை போல் நான் போலீஸ் இல்லை பொறுக்கி' என்று சினிமா டயலாக்கை கூறியுள்ளார்.
காசோலை
ராயபுரத்தில் உள்ள மீனவர்களிடம் கூறி கொன்றுவிட்டு கடலில் வீச கூறிவிடுவேன் என்று தாம்சன் மிரட்டியுள்ளார். இதனால் உயிருக்கு பயந்த முத்தையா ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அவர்களுக்கு கொடுத்துள்ளார்.
மிரட்டல்
இதுகுறித்து காவல்துறைக்கோ அல்லது வேறு யாரிடமும் தகவல் கூறக் கூடாது என்றும் மிரட்டியுள்ளனர். வீட்டிற்குள் இரவு சுமார் 11 மணியளவில் புகுந்த மூவரும் நள்ளிரவு 2.15 மணிவரை பணம் கேட்டு மிரட்டியுள்ளது தெரியவந்தது.
புகார்
இதைத் தொடர்ந்து அவர்கள் போனவுடன் வெளியூரில் உள்ள தனது மகன் எட்வினுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் சென்னைக்கு வந்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
போலீஸ் வலை
கொலை மிரட்டல் விடுத்து காசோலை பறித்துச் சென்ற காவல் ஆய்வாளர் மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டதின் பேரில் பீர்க்கன்கரணை போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள தாம்சன், துணை நடிகை சஜினி, கணவர் பாண்டியன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். ஆய்வாளர் தாம்சன் ஏற்கெனவே காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்.