சட்ட விரோத பண பரிமாற்றம் - ரூ.36 லட்சம் மோசடி செய்த இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பதில் மோசடி செய்ததாக புகார் எழுந்த அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணிமாற்றம்செய்து காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவு
சென்னை: பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாகக் கூறி 36 லட்ச ரூபாயை மோசடி செய்தாக சென்னை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரனிடம் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணாநகர் சரகத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் ஜெயச்சந்திரன். இவர், தன்னுடைய உறவினர் மூலமாக, ஒருவருக்கு பழைய நோட்டுகளை மாற்றிக் கொடுத்து வந்துள்ளர்.
எனவே, இவரை தொடர்பு கொண்ட ஒரு தொழிலதிபர் ரூ.1 கோடியை அவரிடம் கொடுத்துள்ளார். அதில், ரூ.64 லட்சத்தை மட்டும் புதிய நோட்டாக சந்திரன் மாற்றிக் கொடுத்து விட்டார். மீதி ரூ.36 லட்சத்தை அவருக்கு திருப்பி தராமல் கடந்த 3 மாதங்களாக இழுத்தடித்து வந்ததாக தெரிகிறது.
பணம் மாற்றிக்கொடுத்ததற்கு ரூ. 36 லட்சம் கமிஷன் என்று கூறினாராம் ஜெயச்சந்திரன். இதனையடுத்து பணத்தை கொடுத்த அந்த தொழில் அதிபர், சென்னை கமிஷனர் அலுலகத்திற்கு சென்று, உயர் அதிகாரிகளிடம் இதுபற்றி முறையிட்டார்.
இதுதொடர்பாக மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ்குமார் விசாரணை நடத்தினார். புகார் கூறப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம் செய்யப்படுவார் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
அண்ணாநகர் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரனை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணிமாற்றம்செய்து காவல் ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கி அதிகாரிகளும், தரகர்களும் துணை புரிவதாக புகார்கள் வந்தன. சென்னையில் சாஸ்திரி நகர், திருவான்மியூர், நுங்கம்பாக்கம், அயனாவரம் உள்ளிட்ட 14 போலீஸ் நிலையங்களில் இதுபோன்ற புகார்கள் பெறப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
பிரபல தொழில் அதிபர் சேகர் ரெட்டியும், அவரது கூட்டாளிகளும் ரூபாய் நோட்டு மாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டனர். ரூபாய் நோட்டு விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவரே சிக்கியுள்ளது, சென்னை போலீசார் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்பெக்டரின் உறவினர் மற்றும் ஒரு போலீஸ்காரர் உள்ளிட்ட 5 பேர் இந்த புகாரில் சிக்கியுள்ளனர். சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தது உறுதியானால் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.