போரடிய மாற்றுத்திறனாளிகள்... கைது செய்து நடுவழியில் தவிக்கவிட்ட காவல்துறை
சென்னை: தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பார்வையற்ற மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் உட்பட 15 பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி காவல்துறையினர் மதுராந்தகம் அருகே நடு வழியி்ல் விட்டுவிட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பார்வையற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பார்வையற்ற பட்டதாரிகள் கடந்த 4 நாட்களாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை தமிழக முதல்வரை நேரில் சந்தித்து தெரிவிக்க, அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி கண்ணகி சிலை அருகே அவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் காமராசர் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த காவல்துறையினர், மயிலாப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதனையடுத்து மாலையில் அனைவரையும் விடுவித்த காவல்துறையினர், உண்ணாவிரதம் இருந்த 9 பேரையும், அவர்களுடன் இருந்த 6 பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக கூறி, மதுராந்தகம் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு நள்ளிரவில் திடீரென நடுவழியில் இறக்கிவிட்ட காவல்துறையினர், விரைவாக அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதனால் உதவி செய்ய யாருமில்லாத நிலையில், பார்வையற்ற பட்டதாரிகள் அங்கு தவித்து வருகின்றனர்.