3 பல் இல்லாத சரவணனை உங்களுக்குத் தெரியுமா.. உடனே இந்த எண்ணை அழையுங்கள்.. போலீஸுக்கு உதவுங்கள்
சென்னை: சென்னை முகப்பேர் டாக்டர் சங்கீதா கொலை வழக்கு விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் 3 பற்கள் இல்லாத சரவணன் என்பவரைப் பிடிக்க பொதுமக்களின் உதவியைப் போலீஸார் கோரியுள்ளனர்.
மே 6ம் தேதி முகப்பேர் வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த சங்கர் என்ற கம்ப்யூட்டர் என்ஜீனியரின் மனைவியான 32 வயது பல் டாக்டர் சங்கீதா தனது கிளினிக்கில் வைத்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது தாலி மற்றும் 12.5 பவுன் தங்க நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
சங்கீதாவின் கண்ணில் குத்தியும், வாயை, மூக்கைப் பொத்தியும் மூச்சுத் திணறடித்துள்ளனர். பின்னர் சுடிதார் துப்பட்டாவால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பட்டப் பகலில் இந்தக் கொலை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இதுவரை கொலையாளி சிக்கவில்லை.
10 தனிப்படை போலீஸார் தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். அதிலும் ஆதாயக் கொலைகள் வழக்கில் கில்லாடிகளாக செயல்படும் சில போலீஸாரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர் சங்கீதா எழுதி வைத்திருந்த ஒரு டைரிக் குறிப்பும், துண்டுச் சீட்டும்தான் தற்போது போலீஸாரிடம் உள்ள ஒரே துருப்புச் சீட்டாகும். அதில் முகப்பேரைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு 3 பற்கள் கட்டுவது தொடர்பாக டாக்டர் சங்கீதா குறிப்பு எழுதி வைத்துள்ளார். இந்த நபரின் செல்போன் எண்ணையும் அதில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் சரவணன் கொடுத்ததாக கருதப்படும் அந்த எண் போலியானதாகும். அது ஒரு விபச்சார புரோக்கருக்குரியது என்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.
3 பற்கள் இல்லாத சரவணன் பல் கட்டுவதற்காக சங்கீதாவிடம் வந்துள்ளார். ஆனால் அவர் தற்போது என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இவர் மீது போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதையடுத்து முகப்பேர் பகுதியில் 35 வயதையொத்த சரவணன் என்ற பெயருடைய 64 பேரை போலீஸார் லிஸ்ட் எடுத்துள்ளனர். அவர்களிடம் துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல முகப்பேர் பகுதி பொதுமக்களும் இந்த சரவணன் குறித்த தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம் என்றும் போலீஸார் உதவி கோரியுள்ளனர்.
சரவணன் குறித்த தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
(செல்போன் எண்கள்) 8056007474, 9840323364, 9840139599