போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினர் – சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னை: சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின்போது போலீஸ் வாகனத்தையும் சேதப்படுத்தினார்கள் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தி அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் நடத்திய மறியல் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனையடுத்து மாணவர்கள் மீது போலீசார் தடி அடி நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் ஒன்றும் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது 4 போலீஸ்நிலையங்களில் மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக நேற்று இரவு போலீசார் தெரிவித்தனர்.
இந்த போராட்டம் எதிரொலியாக நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம், டி.ஜி.பி அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.