ஜெ- சசி கார்டிரைவர் கனகராஜ் மரணத்தில் மர்மம்.. அ.தி.மு.கவினர் 24 பேருக்கு போலீசார் குறி!
போயஸ்கார்டனில் ஜெயலலிதா வீடு மற்றும் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ். இவர் கடந்த மாதம் சாலை விபத்தில் உயிரிழந்தார். அதில் மர்மங்கள் உள்ளது என்று கூறப்படும் நிலையில் போலீசார
கோவை: கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கனகராஜுடன் தொடர்பில் இருந்த மேலும் 24 அ.தி.மு.க. பிரமுகர்களை சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.இதனால் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த மாதம் 24ம் தேதி நடந்த காவலாளி கொலை, கொள்ளை வழக்கு விசாரணை அடுத்த கட்டத்துக்குச் சென்றுள்ளது.
இவ்வழக்கில் இதுவரை கேரளாவை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குட்டி என்ற பிஜின் என்பவர் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான கனகராஜ் சேலம் மாவட்டம் தென்னங்குடி பாளையம் அருகே நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி பலியானார்.
கனகராஜின் கூட்டாளி சயன் கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு விபத்துகளும் மர்ம நபர்களால் நிகழ்த்தப்பட்டவை என்று செய்திகள் வெளியாகின.
கொள்ளை போன பொருட்கள் என்ன
கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்து என்னென்ன பொருட்கள் கொள்ளை போயின, இந்தக் கொள்ளை மற்றும் காவலாளி கொலை பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணையை மீண்டும் துரிதப்படுத்தி உள்ளனர்.
செல்போன் தொடர்பில் இருந்தவர்கள்
கனகராஜின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் அண்ணன் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து கனகராஜுடன், அவரின் செல்போனில் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் விசாரித்தனர். அந்த வகையில் கனகராஜுடன் செல்போனில் தொடர்பில் இருந்ததாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டிக்கு சேலம் ஆத்தூர் போலீசார் சம்மன் அனுப்பினர்.
ஆஜரான ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.
அதன்படி நேற்று ஆத்தூர் போலீசில் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி ஆஜரானார். அப்போது அவரிடம், உங்களுக்கு கனகராஜை எப்படி தெரியும்? எந்த வகையில் பழக்கம்? அவர் இறந்த செய்தி எப்போது தெரியும்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் கேட்டனர். சுமார் 1 மணி நேரம் அவரிடம் விசாரணை தீவிரமாக நடத்தப்பட்டது.
சிக்கிய 24 அதிமுக பிரமுகர்கள்
இதற்கிடையே கனகராஜுடன் செல்போனில் தொடர்பில் இருந்தவர்கள், பங்களா அறையில் இருந்த டெலிபோனில் பேசியவர்களின் பட்டியலை கோத்தகிரி போலீசாரும் சேகரித்தனர். இதில் 24 முக்கிய அ.தி.மு.க. பிரமுகர்களின் செல்போன் எண்கள் பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.
விரைவில் சம்மன்
இந்த 24 பேரும் கனகராஜுடன் எப்படி பழக்கமானார்கள்? கனகராஜுடன் எந்த வகையில் தொடர்பில் இருந்தார்கள்? என்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இன்னும் ஓரிரு நாளில் இந்த விசாரணை நடைபெறும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.