தூத்துக்குடியை சுடுகாடாக்கிய போலீஸ்- 8 பேரை குருவிகளை சுடுவது போல் சுட்ட பெருங்கொடுமை!
தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதை அடுத்து அந்த நகரையே போலீஸார் சுடுகாடாக்கிவிட்டனர்.
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் 8 பேரை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளியதன் மூலம் அந்த நகரையே போலீஸார் சுடுகாடாக்கிவிட்டனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை இருப்பதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன் விவசாயம் செழிக்க வழியில்லை என்று கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மூச்சுத்திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் கூறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அந்த நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட மக்கள் பேரணி சென்றனர். அப்போது அவர்களை பாதியிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
சூறை
இதையடுத்து போலீஸாரை முண்டியடித்துவிட்டு போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை சூறையாடினர்.
பொதுமக்கள்
இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் பலியாகிவிட்டனர். அவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள். போராட்டத்தை கட்டுப்படுத்த இன்னும் போலீஸாரை அழைப்பதை விடுத்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன்.
தண்டனை அனுபவித்தல்
ஏதோ காக்கா, குருவிகளை சுடுவது போல் மக்களை சுடுவது எந்த விதத்தில் நியாயம். ஜனநாயக நாட்டில் போராடுவது ஒரு குற்றமா. பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் கூட செய்த தப்புக்கு தண்டனை அனுபவித்து வெளியே வந்துவிடுகிறார்.
சுடுகாடாக மாறியது
ஆனால் அப்பாவி மக்கள் தங்கள் வாழ்வாதார உரிமைகளுக்காக போராடினால் அவர்களை சுட்டுக் கொள்வதா. கேட்டால், கலவரத்தை கட்டுப்படுத்த என்கிறார்கள். கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டுமானாலும் ரப்பர் குண்டுகளால் சுட்டிருக்கலாமே. இதனால் தூத்துக்கடியே சுடுகாடாக மாறிவிட்டது. அவ்வாறு மாற்றியது மக்களுக்கு நண்பர் என்று கூறிக் கொள்ளும் போலீஸ் என்பது வேதனையிலும் வேதனை.