"பட்ரோல்" வண்டியிலேயே பெட்ரோலை “ஆட்டையை” போட்ட போலீஸ்காரர்!
சென்னை: சென்னை போலீஸ் ரோந்து வாகனத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரரே பெட்ரோல் திருடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் ரோந்து வாகனம் ஒன்றில் அடிக்கடி பெட்ரோல் திருடப்பட்டு வந்துள்ளது.
அந்த வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரரே பெட்ரோலை திருடுவதாக குற்றம் சாட்டப்பட்டாலும் அவர் கையும் களவுமாக பிடிபடாமல் இருந்தார்.
டிரைவர் இல்லாத வாகனம்:
இந்நிலையில் குறிப்பிட்ட போலீஸ் ரோந்து வாகனம் ஆயிரம் விளக்கு போலீஸ் குடியிருப்பு அருகில் நின்று கொண்டிருந்தது. ஆனால் டிரைவர் இருக்கையில் இல்லை.
சந்தேகம் அடைந்த போலீசார்:
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் குடும்பத்தைச் சேர்ந்த சிலர், இதுபற்றி ஆயிரம் விளக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
பெட்ரோல் திருடிய காவலர்:
அப்போது ரோந்து வாகனத்தின் டிரைவரான போலீஸ்காரர், அதன் அருகில் அமர்ந்து பெட்ரோல் திருடிக்கொண்டிருந்தார். அவரை மடக்கிப் பிடித்த போலீசார் ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து விசாரணை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட அந்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த வீட்டையே கொளுத்திய கதையாக, போலீஸ் வண்டியிலேயே காவலர் பெட்ரோல் திருடிய சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.