மாணவி காயத்திற்கு கட்டுப்போட்ட போலீஸ் ஏட்டு – சில்மிஷம் செய்வதாக அடித்து, உதைத்த மக்கள்!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தேர்தல் பணிக்கு சென்ற இடத்தில் பள்ளி மாணவியின் காயத்திற்கு கட்டுப்போட்ட போலீஸ் ஏட்டு ஒருவரை சில்மிஷம் செய்ததாக பொதுமக்கள் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருபவர் நாராயணன்.
இவர் ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப்பள்ளி பஞ்சாயத்தில் நடந்த இடைதேர்தல் சிறப்பு காவல் பணிக்காக நியமிக்கப்பட்டு அங்குள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஒன்பதாம் வகுப்பு மாணவி:
நேற்று மாலை நேரத்தில் பள்ளி முடிந்து வெளியே வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் காயத்திற்கு கட்டு போட்டு விட்டுள்ளார் நாரயணன்.
அடித்து உதைத்த மக்கள்:
அப்போது அங்கு வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏட்டு நாராயணனை கட்டி வைத்து அடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த சாமல்பட்டி போலீஸார் ஏட்டு நாராயணனை பொதுமக்களிடமிருந்து மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
பாதுகாப்புப் பணி:
அப்போது அவர், "கெரிகேப்பள்ளி பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்குச் சென்றிருந்தபோது கஞ்சனூர் கேட் பகுதியில் நான் பாதுகாப்பு பணியில் நின்று கொண்டிருந்தேன்.
மாணவியிடம் விசாரிப்பு:
அப்போது சாலமரத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு மாணவி அழுது கொண்டு வந்தார். அவரிடம் "எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்?" என நான் விசாரித்துக் கொண்டிருந்தேன்.
காயத்திற்கு மருந்து:
அப்போது மாணவி, "தன்னுடன் படிக்கும் மாணவிகள் என்னை கீழ் தள்ளிவிட்டனர்.அதனால் கையில் காயம் ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். நான் அந்த மாணவியின் காயத்தை சுத்தம் செய்து, கட்டுபோட்டு அனுப்ப முயற்சி செய்தேன்.
சில்மிஷம் செய்ததாக முடிவு:
அந்த நேரத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத ஐந்து பேர் கொண்ட கும்பல் மாணவியிடம் சில்மிஷம் செய்ய முயன்றதாக கூறி என்னை அடித்து உதைத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக சாமல்பட்டி போலீஸில் ஏட்டு நாராயணன் புகார் அளித்தார்.
செல்போன் விசாரணை:
இதுகுறித்து தகவலறிந்த கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி.கண்ணம்மாள் சம்மந்தப்பட்ட மாணவியிடம் செல்போன் வாயிலாக விசாரணை மேற்கொண்டார்.
உண்மை தெரிந்தது:
அப்போது மாணவி தன்னிடம் நாராயணன் தவறாக நடக்கவில்லை என்றும் தன்னுடைய உள்ளங்கையில் இருந்த காயத்துக்கு கட்டுப்போட்டு விட்டார் என்று கூறியுள்ளார்.
குழந்தையில்லாத ஏட்டு:
மேற்கொண்டு விசாரித்ததில், அடிவாங்கிய தலைமைக்காவலர் நாராயணனுக்கு குழந்தைகள் இல்லை என்றும், அவர் எங்கு குழந்தைகளை பார்த்தாலும் அவர்களிடம் பாசமாக நடந்துகொள்வார் என்றும் அவருக்கு சரியாக காது கேட்காது என்றும் தெரிய வந்தது.
மர்ம நபர்கள் மேல் வழக்கு:
இந்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்த சாமல்பட்டி போலீஸார் ஏட்டு நாராயணனை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.