நெல்லை காவலர் ஜெகதீசன் துரை கொலை வழக்கு: நீதிமன்றத்தில் ஒருவர் சரண்
நெல்லை காவலர் ஜெகதீசன் துரை கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.
Recommended Video
நெல்லை: நெல்லையில் மணல்கொள்ளையை தடுக்கச் சென்ற காவலர் ஜெகதீசன் துரை கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவர் சரணடைந்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் விஜயநாராயணம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு காவலராக பணியாற்றி வந்தவர் ஜெகதீசன் துரை. கடந்த 6-ஆம் தேதி நம்பியாற்றில் சிலர் மணலை அள்ளிச் செல்வதாக அவருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் மணல் கொள்ளையை தடுக்க நம்பியாற்றுக்கு விரைந்தார். அதிகாலை நேரத்தில் ஜெகதீசனை கண்ட மணல் கொள்ளையர்கள் அவரை கம்பியால் தாக்கியும் தலையில் அடித்தும் கொலை செய்தனர்.
இந்நிலையில் நம்பியாற்றுக்கு சென்ற ஜெகதீசனை காணாமல் சக போலீஸார் அவரை தேடி சென்றிருந்த போது சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து இவரது உடல் சொந்த ஊரான நாங்குனேரி அருகே உள்ள சிந்தாமணியில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் காவலர் ஜெகதீசன் துரை கொல்லப்பட்ட வழக்கில் அமிதாப்பச்சன் என்பவர் நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கில் போலீஸார் ஏற்கெனவே இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.