ஜெயலலிதா உடல்நலம் குறித்து வதந்தி பரப்பிய மேலும் ஒருவர் கைது- தொடரும் போலீஸ் வேட்டை
தூத்துக்குடி: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியை சேர்ந்த ஆண்டனி சேசுராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பியதாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 43 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வரின் உடல்நிலை குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. அப்பல்லோவில் இருந்து கடந்த சில தினங்களாக அறிக்கையும் வெளியாகவில்லை இதனால், அதிமுகவினர் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் பரவியுள்ளது.
வதந்தி பரப்பினால் நடவடிக்கை
இந்தநிலையில், முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்த எச்சரிக்கையும் மீறி முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டது. இதுகுறித்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், வடக்கு சென்னை, துணை செயலாளர் ராஜ்கமல் ஆகியோர் சென்னை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்திருந்தனர். இதன்பேரில் போலீசார் 43 வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.
அதிரடி கைது
இந்நிலையில், வதந்தி பரப்பிய நாமக்கல்லை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சதீஷ் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர் கடந்த 10ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர், திருமணி செல்வம், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில், கோவையில் நேற்று அதிமுக நிர்வாகி புனிதா என்பவர் அளித்த புகாரில் கனரா வங்கி ஊழியர்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
7வது நபர் கைது.
வதந்தி பரப்புவோரை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக மத்திய குற்றப்பிரிவின்,சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதற்காக, கணினி வழி குற்றங்களை கண்டுபிடிப்பதில், திறமை வாய்ந்த போலீசார் மற்றும் நிபுணர்கள் இடம் பெற்ற சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பேஸ்புக்கில் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடியை சேர்ந்த ஆண்டனி சேசுராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து அவதூறு பரப்பியதாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வதந்தி பரப்புவோருக்கு 7 வருடம் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். இதனிடையே வதந்தி பரவுவதைத் தடுக்க முதல்வர் ஜெயலலிதா குறித்த முழு உடல் தகுதி அறிக்கைகளை வழங்க வேண்டும் என்பதை அதிமுக தொண்டர்கள், பொதுமக்களின் கோரிக்கையாகும்.