தமிழகம் முழுவதும் திடீர் ரவுடி வேட்டை.. சென்னையில் 105 பேர் சிக்கினர்!
தமிழகம் முழுவதும் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: தமிழக அரசியலில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலையில் போலீசார் மாநிலம் முழுவதும் சோதனை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். சென்னையில் மட்டும் 105 ரவுடிகளை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் நாற்காலி யாருக்கு என்பதில் ஓ. பன்னீர்செல்வம் சசிகலா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இனியும் பொறுமையாக இருக்கமாட்டோம் என்று சசிகலா வன்முறையை தூண்டும் வகையில் பேசியது ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உள்ளிட்ட இடங்களில் சமூக விரோதிகள் பெரும் கலவரச் சம்பவங்களில் ஈடுபடலாம் என போலீசாருக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன. இதன்பேரில், சென்னை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வந்துள்ள ரவுடிகள் சென்னையில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக அச்சம் எழுந்தது.
போலீஸ் சோதனை
கடந்த இரு தினங்களாக சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபங்கள், லாட்ஜ் மற்றும் ஓட்டல்களில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகின்றனர். இதுவரையிலும், 1340 லாட்ஜூகள், 540 திருமண மண்டபங்களில் சோதனை செய்துள்ளதாகவும், மேலும் பல இடங்களில் அதிரடி வேட்டை தொடர உள்ளதாகவும் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
சென்னையில் 105 பேர் கைது
சென்னையில் பல இடங்களில் தங்கியிருந்த 105 ரவுடிகளை கைது செய்து, விசாரணை நடத்துவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை வியாசர்பாடி, சர்மாநகர், எண்ணூர், கொடுங்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரவுடிகள் சிலர், செங்குன்றத்தை அடுத்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகாத்தம்மன் நகர், பெருமாள்அடிபாதம், ஆட்டந்தாங்கல், அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் தஞ்சம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரின் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.
தென் மாவட்டங்களில் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 31 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தேனியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 19 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 77 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் 53 பேரும், கரூரில் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமாவட்டங்களில் ரவுடிகள்
கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அரசியல் சூழ்நிலை காரணமாக வுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.