ரஜினி ரசிகர்கள் மாநாடு.. அரசியல் பேசக் கூடாது... போலீஸ் கண்டிப்பு!
சோளிங்கர்: ரஜினி ரசிகர்கள் நடத்திய முதல் மாநாட்டில் யாரும் அரசியல் பேசக் கூடாது என போலீசார் கெடுபிடி காட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மலரட்டும் மனிதநேயம் என்ற பெயரில் ரஜினி ரசிகர்கள் வேலூர் அருகே உள்ள சோளிங்கரில் மாநாடு ஒன்றை நேற்று மாலை நடத்தினர்.
தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டுக்கு அனுமதி கொடுக்கவே முதலில் போலீசார் தயங்கினர். பல்வேறு காரணங்களைக் கூறி அனுமதி தராமல் இழுத்தடித்து, மாநாட்டுக்கு 4 மணி நேரத்துக்கு முன்புதான் அனுமதி வழங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. இசை நிகழ்ச்சி முடிந்து, மேடையில் பேச்சாளர்கள் பேச ஆரம்பித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் பால நமச்சி என்பவர் ரஜினி அரசியல் பிரவேசம் செய்ய வேண்டும் என உரத்த குரலில் பேச ஆரம்பித்ததுமே, மேடைக்கு அருகில் இருந்த காவல் அதிகாரி ஓடிவந்து, 'அரசியல் பேசக் கூடாது' என எச்சரித்தார். ஆனால் பால நமச்சி தொடர்ந்து பேசப் பேச டென்ஷனான காவல் அதிகாரி, அவரை சீக்கிரம் முடித்துக் கொள்ளுமாறு கண்டிப்பாகக் கூறினார்.
அதேபோல, நடிகர் கருணாஸ் ரஜினி அரசியலுக்கு வந்தே தீர வேண்டும்... அதற்காகவே தானும் காத்திருப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும்போதே, அவரை பேசி முடிக்குமாறு கட்டாயப் படுத்தினார் காவல் அதிகாரி. இல்லாவிட்டால் மைக்கை ஆப் பண்ணி விடுவோம் என்று எச்சரிக்க, கருணாஸ் சீக்கிரம் முடித்துக் கொண்டார்.
பல லட்சம் செலவழித்து, உரிய அனுமதியோடு நடத்தும் மாநாட்டில் என்ன பேச வேண்டும் என்று போலீசார் எப்படி உத்தரவிடலாம், அரசியல் பேசுவதை எப்படித் தடுக்கலாம் என்று ஆதங்கப்பட்டனர் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.