தீபாவளி: கடைவீதிகளில் குவியும் கூட்டம்… ரோந்துப் பணியில் போலீசார்
நெல்லை: இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளதால் முக்கிய நகரங்களின் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கூட்டத்தை பயன்படுத்தி கொள்ளை மற்றும் பிக்பாக்கெட் அடிக்கும் கும்பல்களிடம் இருந்து மக்களை பாதுகாக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் நவம்பர் 2ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜவுளிகடைகள் ,மற்றும் நகை கடைகளில் கடந்த ஒருவாரகாலமாக கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை டவுன், தென்காசி, சங்கரன்கோவில், சுரண்டை, ஆலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் பாளை ரோடு, காசுகடை பஜார், பழைய பேருந்து நிலைய ரோடு, திருச்செந்தூர், உடன்குடி, ஏரல் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
குமரிமாவட்டத்தில் நாகர்கோவில், குளச்சல், குலசேகரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜவுளி, நகை, மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள் எடுப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொள்ளை சம்பவங்கள் நடப்பதுண்டு.
கொள்ளையர்கள் வாடிக்கையாளர் போல ஜவுளி,நகை கடைக்கு வந்து துணி,நகைகளை வாங்குவதுபோல் நடித்துவிட்டு அதன்பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் அபேஸ் செய்துவிட்டு தப்பிவிடுகின்றனர். என்னதான் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டிருந்தாலும் அதிலிருந்தும் தப்பிவிடுகின்றனர்.
இது மட்டுமல்லாமல் ஜவுளி எடுத்து வருவர்களிடம் அவர்கள் அசந்து இருக்கும் நேரம் பார்த்து நகை மற்றும் பர்சைக் திருடிச் செல்கின்றனர். இது சம்பந்தமாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி திருட்டு,வழிப்பறி சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக போலீஸ்சார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட்,திருடர்கள் கைவரிசைகளை காட்டுவதை கண்டுபிடிக்க தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனிப்படை போலீசார் சாதாரண உடையில் மக்களோடு மக்களாக ரோந்து சுற்றி வருகின்றனர்.இதனைப்போல பெண் போலீஸ்சாரும் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தவிர ஜவளி, நகைக் கடை உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்கவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் தனிப்படைகள் ரோந்து பணியை தீவிரம் படுத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தங்களது கைவரிசையை காட்டி விடக்கூடாது என்பதில் காவல்துறை கவனத்தோடு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.