ஓபிஎஸ்-க்கு ஆதரவாகவும் மெரினா புரட்சி? கடற்கரையில் போலீசார் திடீர் குவிப்பு!!
முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர்கள் மெரினா கடற்கரையில் திரளக் கூடும் என தகவல் பரவியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் ஒன்று திரளக் கூடும் என தகவல் பரவியதால் அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டு எனும் பண்பாட்டு அடையாளம் மீட்புக்காக சென்னை மெரினா கடற்கரையில் பல லட்சம் இளைஞர்கள் ஒன்று திரண்டு அமைதி அறவழிப் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றனர். இப்போராட்டத்தை போலீசார் வன்முறையால் ஒடுக்கினர்.
இந்த நிலையில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து அதிமுகவை கைப்பற்றிய சசிகலாவுக்கு எதிரான கலகக் குரலை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார். அவருக்கு தமிழகம் முழுவதும் ஆதரவு அதிகரித்து வருகிறது.
தற்போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வமே பதவியில் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை மெரினாவில் இளைஞர்கள் ஒன்று திரளப் போவதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.