சென்னையில் கைதான வடமாநில இளைஞர்கள் கூட்டாளிகளா...? நாதுராமிடம் விசாரணை நடத்த போலீஸ் திட்டம்
வடசென்னையில் கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள் கூட்டாளிகளா என நாதுராமிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டம்
சென்னை: வேப்பேரியில் துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள் நாதுராமின் கூட்டாளிகளா என அவனிடம் போலீசார் விசராணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொளத்தூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதுராம், ராஜஸ்தானில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டான். கடந்த மாதம் சென்னை கொளத்தூர் நகைக்கடை கொள்ளை தொடர்பாக குற்றவாளி நாதுராமை தேடி சென்னையை சேர்ந்த தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்றனர். டிசம்பர் 12-ம் தேதி அதிகாலை நாதுராம் மற்றும் அவனின் கூட்டாளிகளை பிடிக்க முற்பட்ட போது ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து தேடுதல் வேட்டையை பாதியிலேயே நிறுத்திய போலீசார், பெரியபாண்டியன் உடலோடு சென்னை திரும்பினர். இதுகுறித்து ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளி நாதுராமை ஒரு மாதத்துக்கு மேலாக தேடி வந்தனர். இந்நிலையில், நாதுராமை போலீசார் குஜராத்தில் கைது செய்து நேற்று தமிழக போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் ராஜஸ்தானில் இருந்து விமானத்தின் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அவனை அடைத்தனர்.
இந்நிலையில் சென்னை வேப்பேரியில் வடமாநில இளைஞர்கள் இருவர் காலையில் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தால் அவர்களை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று நாதுராம் சென்னை கொண்டு வரப்பட்ட நிலையில், இன்று இவர்கள் கைதாகியுள்ளதால், நாதுராமின் கூட்டாளிகளாக அவர்கள் இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து நாதுராமிடம் வடமாநில இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.