ரவுடிகள் பட்டியல் தயாரிப்புப் பணியில் போலீஸார்: என்கவுண்டர் பீதியில் வெளிமாநிலத்தில் பதுங்கும் ரவுடிகள்
போலீஸார் ரவுடிகள் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் பல ரவுடிகள் என்கவுண்டர் பீதியில் வெளிமாநிலங்களில் பதுங்கியுள்ளனர்.
நெல்லை : மதுரையில் சமீபத்தில் நடந்த என்கவுண்டரில் இரண்டு ரவுடிகள் கொல்லப்பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதால் பலர் வெளிமாநிலத்தில் பதுங்கத் துவங்கியுள்ளனர்.
சென்னையில் பிரபல ரவுடி பினு பிறந்த நாளன்று ஏராளமான ரவுடிகள் ஒன்று சேர்ந்து கொண்டாடினர். அப்போது அதிரடியாகச் செயல்பட்ட போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து அங்கிருந்த 75 ரவுடிகளைக் கைது செய்தனர்.
இதில் ஒரு சில ரவுடிகள் தப்பி ஓடித் தலைமறைவாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். போலீஸாரின் தீவிர தேடுதலால் ரவுடி பினு, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் போலீஸில் சரணடைந்தனர்.
இந்நிலையில் மதுரையில் பிரபல ரவுடிகள் முத்து இருளாண்டி மற்றும் சகுனி கார்த்திக் ஆகியோர் கடந்த வாரம் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இவர்கள் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் வழக்குகள் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரவுடிகளை கைது செய்யவும், தேவைப்பட்டால் சுட்டு பிடிக்கவும் மாவட்ட எஸ்பிக்களுக்கு டிஜிபி உத்தரவி்ட்டுள்ளார்.
இதனையடுத்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் டிஐஜி கபில்குமார் சரத்கர் உத்தரவின் பேரில் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு பெரும்பாலான கொலைகள் கூலி படைகள் மூலமே அரங்கேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து அபாயர ரவுடிகளை பிடிக்கவும், தேவைப்பட்டால் என்கவுண்டர் செய்யவும் ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் உயிர் பயத்தில் ரவுடிகள் வெளி மாநிலத்திற்கு தப்பி ஓடிய பதுங்கிய வண்ணம் உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.