தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலை.. சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்திய தமிழக அரசு
சென்னையில் மெரினா மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு மூலம் நடத்திய கோரத்தாண்டவத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடித்தனமான தாக்குதல் காரணமாக இதில் 12 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர். பெண்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று பார்க்காமல் போலீஸ் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த மோசமான அரசு படுகொலை காரணமாக தமிழகமே கொதித்துப் போய் உள்ளது. சமுக வலைத்தளங்கள் தொடங்கி எல்லா இடத்திலும் மக்கள் அரசுக்கு எதிராக கண்டன குரலை கொடுத்து வருகிறார்கள். தமிழகம் முழுக்க இருக்கும் மக்களை இந்த நிகழ்வு பெரிய சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் இதற்கு எதிராக தமிழகம் முழுக்க போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக சென்னையில் மெரினா, அண்ணாசாலை போன்ற பகுதிகளில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக செய்தி வெளியானது.
இதனால் தற்போது தமிழகம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மெரினா மற்றும் டிஜிபி அலுவலக பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
3 இணை ஆணையர்கள் தலைமையில் சென்னை முழுக்க போலீஸ் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. காலையில் இருந்து சென்னை கடலோர பகுதிகளில் மட்டும் 2000 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் பதட்டமான நிலை நிலவுகிறது.