கொலை மிரட்டல்கள் எதிரொலி ஜீயருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக புகார்கள் வந்ததையடுத்து போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டாளை தவறாக சித்தரித்து பேசியதாக வைரமுத்து மீது ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் முதன்முதலில் உண்ணாவிரதம் இருந்தார். ஆண்டாள் சந்நிதியில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என்று கூறியவர் 2 நாட்களிலேயே உண்ணாவிரதத்தை திரும்பப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க பிப்ரவரி 3ம் தேதி வரை ஜீயர் கெடு விதித்திருந்தார். எனினும் வைரமுத்து ஆண்டாள் சந்நிதிக்கு வந்து மன்னிப்பு கேட்காததால் மீண்டும் உண்ணாவிரதம் இருந்தார். இந்த உண்ணாவிரதத்தையும் முழுவதும் தொடராமல் பாதியிலேயே கைவிட்டார்.
சோடா பாட்டில் பேச்சு ஜீயர்
இதனிடையே திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தின் போது எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும், கல் எறியத் தெரியும் என்று ஜீயர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆண்டாள் விவகாரத்தை வைத்து வைரமுத்துவை விமர்சித்த ஜீயரே கடைசியில் சர்ச்சையில் சிக்கினார்.
வன்முறையைத் தூண்டியதாக வழக்கு
வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஜீயர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடம் நீதிமன்றம் விளக்கமும் கேட்டிருந்தது.
நீதிமன்றம் உத்தரவு
மனு கடைசியாக விசாரணைக்கு வந்த போது புகார் மீது முகாந்திரம் இருந்தால் சடகோப ராமானுஜ ஜீயர் மீது வழக்கு பதியலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் திருச்செங்கோடு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த ஜீயர் எல்லாவற்றையும் ஆண்டாள் பார்த்துக் கொள்வார் என்று கூறி இருந்தார்.
மிரட்டல்கள் எதிரொலியால் பாதுகாப்பு
இந்நிலையில் சடகோப ராமானுஜ ஜீயருக்கு கடிதம் மற்றும் செல்போன் மூலம் கொலை மிரட்டல்கள் வருவதாக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.