சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு... முதல்வர் ஓபிஎஸ் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு
சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு போலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதாலும் எல்எல்ஏக்கள் ஆதரவு அதிகரிக்கும் என்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் 2 ஆக பிரிந்துள்ளதால் முதல்வர் ஓபிஎஸ்க்கும் சசிகலாவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை கூறிக்கொண்டனர்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்புள்ளது.
மன்னார்குடி கோஷ்டியால் கலவரம்
ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடிகள் மன்னார்குடி கோஷ்டியால் களம் இறக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியானது. இந்த சூழ்நிலையில் அவர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எம்எல்ஏக்கள் அணி மாறலாம்
கட்சி தலைமைக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இதனால் சசிகலா அணியில் இருந்து ஓபிஎஸ் அணிக்கு மேலும் சில எம்எல்ஏக்கள் வரலாம் என்றும் கூறப்படுகிறது.
போலீசார் குவிப்பு
இதனால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு வழக்கத்தைவிட அதிக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திரளும் தொண்டர்கள்
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்வதை கொண்டாடும் வகையில் தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் வீடு முன்பு குவிந்து வருகின்றனர். இதற்காகவே போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.