'கும்' பிரியாணி.. சுற்றிச் சுற்றி வந்த பெண்கள்.. பொட்டலங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு... அதிமுக கலாட்டா
சேலம்: சேலத்தில் நடந்த அதிமுக இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில், பிரியாணி பொட்டலங்களுக்கு போலீசார் காவல் இருந்த காட்சி வேடிக்கையாக இருந்தது.
சேலம் நேரு கலையரங்கில் அதிமுக இளம்பெண்கள் பாசறை அலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள் கோகுல இந்திரா, இடைப்பாடி பழனிசாமி, பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக இளம்பெண்கள் பாசறை அமைப்பினர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சாப்பிடுவதற்காக வெஜிடபிள் பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென, கூட்டம் நடைபெற்ற பகுதியில் 2,000 பிரியாணி பொட்டலங்கள், வெங்காய பச்சடி, தண்ணீர் பாக்கெட் ஆகியன 'பேக்' செய்து வைக்கப்பட்டிருந்தன.
இதனால் அப்பகுதி முழுவதுமே பிரியாணி மணமாக இருந்தது. பிரியாணியின் வாசத்தில் இழுக்கப்பட்ட பெண் தொண்டர்கள் சிலர், கூட்டம் துவங்குவதற்கு முன்னரே அப்பகுதியைச் சுற்றிவரத் தொடங்கினர்.
இதையடுத்து பிரியாணிப் பொட்டலங்களை அவர்களிடமிருந்து காக்க வேண்டிய தலையாய பொறுப்பு போலீசாருக்கு ஏற்பட்டது. அதனால் பிரியாணி பொட்டலங்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் பாதுகாப்பிற்காக 10 பெண் போலீசார் நிறுத்தப்பட்டனர். அதோடு அந்தப்பக்கமே யாரையும் அவர்கள் அனுமதிக்கவில்லை.
பின்னர் ஒரு வழியாக கூட்டம் முடிந்ததும், பிரச்சினைகள் ஏற்படாமல் பிரியாணிப் பொட்டலங்கள் பாதுகாப்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிம்மதிப் பெருமூச்சுடன் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார் அங்கிருந்து கலைந்து சென்றனர்.