டிஎஸ்பி மண்டை உடைப்பு... அதிமுக எம்பி மீதே வழக்கு போட்ட திருத்தணி போலீஸ் !
திருத்தணி: திருத்தணியில் அதிமுக கவுன்சிலர் கொலையை கண்டித்து நடந்த சாலை மறியலில் டிஎஸ்பி மண்டை உடைந்தது தொடர்பாக அதிமுக எம்பி அரி உள்பட 17 பேர் மீது வெடிபொருள் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணி சன்னதி தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன். இவரது மகன் ஆப்பிள் ஆறுமுகம் (47). திருத்தணி நகராட்சி 13வது வார்டு அதிமுக கவுன்சிலர். அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மீண்டும் மனு செய்திருந்தார். கடந்த 9ம் தேதி திருத்தணி அருகே கன்னிகோயில் பகுதியில் 4 பேர் கும்பலால் பட்டப்பகலில் வெட்டி கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக ராஜேஷ், ஜாகீர்உசேன், பிரேம்குமார், சின்னசாமி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அதோடு தி.மு.க பிரமுகர் ஒருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதையடுத்து, அதிமுகவினர் திருத்தணியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாருக்கும், அ.தி.மு.கவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது ஜீப்பில் இருந்த திருவள்ளூர் டி.எஸ்.பி ஈஸ்வரனை அ.தி.மு.கவினர் சிலர் உருட்டுகட்டையால் தாக்கியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டையைச் சேர்ந்த போலீஸ்காரர் முருகன், திருத்தணி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அரக்கோணம் தொகுதியின் அ.தி.மு.க எம்.பியான கோ.அரி, அவரது டிரைவர் வெங்கடேஷ், வேலஞ்சேரி காமேஷ், கவுன்சிலர்கள் கருணாநிதி, குமார், முனுசாமி, சுரேஷ், ஏழுமலை மற்றும் விஜயபாஸ்கர், தாயுமானவன், பிரகாஷ், ராமமூர்த்தி உள்ளிட்ட அ.தி.மு.வைச் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது கலகம் விளைவித்தல், வெடிபொருள் வைத்திருத்தல், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், பொது ஊழியரை கடமையை செய்வதில் இருந்து தடை செய்வதற்காக தாக்குதல் அல்லது குற்ற வன்முறையில் ஈடுபடுதல், வெடிபொருள் தயாரித்து ஏற்றுமதி, இறக்குமதி செய்தல், அரசு சொத்து சேதம் உள்ளிட்ட 9 சட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.