வாக்காளர்களுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்த ஓ.பி.எஸ் மகன் மீது வழக்கு பாய்ந்தது
சென்னை: தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களுக்கு தின்பண்டங்கள் விநியோகம் செய்த அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் உள்பட அதிமுக பிரமுகர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியி டுகிறார். நேற்று முன்தினம் இரவு போடி அருகேயுள்ள கூழையனூர் கிராமத்தில் உள்ள பெரியகருப்பசாமி கோயில் அருகில், பொதுமக்களுக்கு இலவச பொருட்களை வழங்கி அதிமுகவினர் வாக்கு சேகரிப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து தகவல் வந்த இடத்துக்கு சென்ற அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது 200க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுகவினர் ஸ்நாக்ஸ் பார்சல்கள் வழங்கிக் கொண்டிருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக அமைச்சர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப், மாவட்ட மகளிரணி செயலாளர் வசந்தா, ஊராட்சி தலைவர் மகாலிங்கம், கோட்டூர் ஊராட்சி அதிமுக கிளை செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் மீது வீரபாண்டி காவல்நிலையத்தில் அதிகாரிகள் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.