ஆவேசத்தில் அவசரப்பட்டு பேட்டி கொடுத்த வைகோ மீது தேர்தல் விதிமீறல் வழக்கு!
கோவில்பட்டி: தேர்தலில் போட்டியிடவில்லை என்றபோதிலும், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதால் வைகோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விநாயகா ரமேஷ் என்பவரை தனது கட்சியின் கோவில்பட்டி வேட்பாளராக, நேற்று களமிறக்கினார் வைகோ.
கோவில்பட்டியில் விநாயகா ரமேஷ் வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு இந்த திடீர் திருப்பத்திற்கான காரணம் என்ன என்பதை திறந்த வேனில் நின்றபடி நிருபர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தெரியும்படி பேசினார் வைகோ.
ஜாதி கலவரத்தை தூண்டிவிட திமுக முயற்சி செய்வதால், பொதுமக்கள் நலன் கருதி தேர்தலில் நிற்கவில்லை என்று வைகோ அப்போது பேசினார்.
இந்த ஆவேச பேச்சின்போதுதான், தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் வைகோ. மனுதாக்கல் செய்யப்படும் பகுதிக்கு 100 மீட்டருக்குள் உள்ள பகுதியில் கூட்டம் சேரக்கூடாது, பேட்டியளிக்க கூடாது என்பது விதிமுறை. ஆனால் ஆவேசத்தில் இருந்த வைகோ இதை கவனிக்காமல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ளேயே உரையாற்றினார்.
இதுகுறித்து அப்பகுதி தேர்தல் பறக்கும்படை தலைவரும், வட்டார வளர்ச்சி அதிகாரியுமான, வேலுமணி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது புகாரின்பேரில் போலீசார் வைகோ மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.