சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற பெண் கடத்தல்- மாஜி யூனியன் தலைவர் மீது போலீஸ் வழக்கு!
சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற பானுமதியை கடத்தியதாக சாத்தான்குளம் யூனியன் முன்னாள் தலைவர் மீது திசையன் விளை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திசையன்விளை: ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற பணிப்பெண் பானுமதி கடத்தப்பட்டது தொடர்பாக சாத்தான்குளம் யூனியன் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது அதிரடி புகார்களை தெரிவித்திருந்தனர் அவரது வீட்டு பணிப் பெண்கள் பானுமதி, ஜான்சிராணி. இந்த வழக்குகளில் சசிகலா புஷ்பா நீதிமன்றங்களை நாடி தப்பிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் திடீரென சசிகலா புஷ்பா மீதான புகாரை தாங்கள் வாபஸ் பெறுகிறோம்; சிலரது அரசியல் லாபங்களுக்காக சசிகலா புஷ்பா மீது புகார் கொடுக்க நேரிட்டது என பானுமதி, ஜான்சி ராணி கூறினர். அத்துடன் சசிகலா புஷ்பா மீது முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பணிப் பெண் பானுமதி திடீரென மாயமானார். அவங்கு எங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரியாத நிலை இருந்து வந்தது. தற்போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் யூனியன் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் மீது பானுமதியை கடத்தியதாக திசையன்விளை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.