தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதர் மகன் மீது எப்ஐஆர் பதிவு: போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பிரபல தாதா காஞ்சிபுரம் ஸ்ரீதர் தனபாலின் மகன் சந்தோஷ்குமார் காவல்துறையினரின் தொடர் விசாரணைக்கு ஆஜராகாததால் 174 ஐபிசி பிரிவில் வழக்கு பதிவு செய்து கிடுக்குப்பிடி விசாரணை
காஞ்சிபுரம்: தலைமறைவாக உள்ள பிரபல கள்ளச் சாராய வியாபாரியும் தாதாவுமான காஞ்சிபுரம் ஸ்ரீதர் தனபாலின் மகன் சந்தோஷ் குமார் லண்டன் நாட்டில் இருந்து இலங்கை வழியாக சென்னை வந்தார். அவரிடம் அமலாக்கப் பிரிவு விசாரணை செய்தது.
பின் சிபிசிஐடி எஸ்.பி .ஸ்ரீநாதா தலைமையில் விசாரணை நடைபெற்றது. அதை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காஞ்சிபுரம் அழைத்து வரப்பட்டு கடந்த 9ந்தேதி காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணி வரை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் எஸ்பி சந்தோஷ் ஹதிமானி சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வைத்து சந்தோஷ் குமாரிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டார்.
இதன் பின் தொடர் விசாரணைக்கு சந்தோஷ் வரவில்லை. இதனால் ஸ்ரீதர் வீட்டில் சம்மன் ஒட்டபட்டது. சந்தோஷ்குமாருக்கு சம்மன் அளித்தும் ஆஜராகாமல் தலைமறைவானதால் நீதிமன்ற ஆணை பெற்று எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, சந்தோஷ்குமார் மீது 174 ஐபிசி பிரிவில் வழக்கு.(எப்ஐஆர் ) பதியப்பட்டது.
இதனால் அச்சமுற்ற சந்தோஷ்குமார் உயர்நீதி மன்றத்தில் ரிட் , குவாஷ் ஆகிய இரண்டு பெட்டிஷன்களை தாக்கல் செய்த பின்னர் நேற்று மூன்றாவது கட்ட விசாரணைக்கு உடன்பட்டார். அவரிடம் மாவட்ட தனிப்படை ஆய்வாளர் மணிமாறன், உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான குழு காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை இடைவிடாமல் விசாரணை நடத்தியது.
சந்தோஷ்குமாரிடம் 100க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு 80 சதவிதம் தெரியாது என்றும் சில கேள்விகளுக்கு ஓரிரு வரியில் எழுத்து பூர்வமாகவும் , வாய்மொழியாகவும் சந்தோஷ் குமார் பதிலளித்தார்.
அவர் கூறியதில் இருந்து துபாய் நாட்டில் ஸ்ரீதர் தனபாலின் மனைவி குமாரி செல்போன் கடை வைத்துள்ளதாகவும் , அதன் அடிப்படையில்தான் ஸ்டூடன்ஸ் விசா பெறபட்டதாகவும் , விசா நீட்டிப்பதற்காக விசாரணைக்கு ஆஜராகாமல் பிரிட்டன் தூதரகம் சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும், 2016ல் இருந்து ஸ்ரீதர் தனபாலின் அடாவடி நடவடிக்கையிலும் , ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டார் என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இந்த முழு விசாரணையும் சந்தோஷ்குமார் மற்றும் அவருடைய வழக்கறிஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
மேலும் சந்தோஷ்குமாரிடம், மாவட்ட தனிப்படை காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான குழுவும் விசாரணையை துவங்கியுள்ளது. இதில் சந்தோஷ்குமாரிடம் பல கிடுக்குப்பிடியான கேள்விகள் கேட்கப்படும் என்பதால் சந்தோஷ்குமார் அச்சத்துடன் காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.