ரூ.10 லட்சம் பறித்த கும்பல்... கண்கள் கட்டி, மயங்கிய நிலையில் வனப்பகுதியில் மீட்கப்பட்ட தொழிலதிபர்!
தொழிலதிபரை கண்கள் கட்டப்பட்டு மயங்கிய நிலையில் போலீசார் மீட்டனர்.
மதுராந்தகம்: தொழிலதிபர் முத்துக்குமாரை கடத்தி சென்று 10 லட்சம் ரூபாய் பறித்துகொண்டு, அவரது கண்களை கட்டி வனப்பகுதியில் விட்டு சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார். இவர் பாக்கம் என்ற இடத்தில் அரவிந்த் செராமிக்ஸ் என்ற டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கடையை மூடிவிட்டு இவர், வீடு வந்து சேரவில்லை. அத்துடன் போனில் தொடர்பு கொள்ளலாம் என்றால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால், கடையின் அருகிலுள்ளவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது, கடையை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை காருடன் கடத்தி சென்றதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மதுராந்தகம் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். முத்துக்குமாருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா அல்லது பணத்திற்காக கடத்தப்பட்டிருப்பாரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மேவலம்பேட்டை அருகே தொழிலதிபரை போலீசார் இன்று மீட்டுள்ளனர். அருகிலுள்ள காட்டு பகுதியில் கண்கள் கட்டப்பட்டு, மயங்கி நிலையில் முத்துக்குமார் விழுந்து கிடந்ததாகவும், அருகிலேயே அவருடைய காரும் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அந்த கும்பல் தொழிலதிபர் முத்துக்குமாரை மிரட்டி 10 லட்ச ரூபாயை பிடுங்கி கொண்டு, கண்களை கட்டி இந்த வனப்பகுதியில் விட்டு சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த கடத்தி சென்ற மர்மகும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.