ரவுடி பினுவின் நண்பர் மாதவனை கரூரில் சுற்றி வளைத்த போலீஸ்
கரூரில் ரவுடி பினுவின் நண்பர் மாதவனை போலீஸார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர்: கரூரில் ரவுடி பினுவின் நண்பர் மாதவனை போலீஸார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த பினு, சென்னைக்கு வந்து அங்கு கொலை, கொள்ளை, போதை பொருள் கடத்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இவர் தனக்கென 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை சேர்த்துக் கொண்டு தனது தொழிலில் வெற்றி கொடி நாட்டி வந்தார்.
இவருக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் இந்த தொழில்களை சற்று நிறுத்தியிருந்தார். அப்போது ராதாகிருஷ்ணன் என்ற ரவுடி பினுவின் இடத்தை பிடித்தார். பினு உடல்நலம் தேறி வருவதற்குள் ராதாகிருஷ்ணன் அபரிமிதமாக வளர்ச்சியை பெற்றுவிட்டார்.
லாரி ஷெட்டில் கொண்டாட்டம்
பல்வேறு வழக்குகளில் பினுவையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில் ரவுடி பினுவுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் என்பதால் பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் உள்ள லாரி ஷெட் ஒன்றில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ராதாகிருஷ்ணனை போட்டு தள்ளுவதற்கு பிளானும் போடப்பட்டது.
70 பேர் கைது
இதையடுத்து ரவுடிகள் அனைவரும் குடித்துவிட்டு கும்மாளம் போட்டனர். அப்போது ரவுடிகள் கூடுவது குறித்து முன்கூட்டியே தகவலறிந்த போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து 70-க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்தனர்.
சேலத்தில் தஞ்சம்
அப்போது பினு, கனகு, விக்கி ஆகிய 3 பேர் மட்டும் தப்பி சென்றனர். பினுவுக்கு சேலத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் அடைக்கலம் கொடுத்ததாக வந்த தகவலை அடுத்து தனிப்படை போலீஸார் அங்கு சென்றனர்.
திருவள்ளூரில் பதுங்கல்
இந்நிலையில் ரவுடி பினுவின் கூட்டாளி முகேஷ் என்பவரை தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் கைது செய்தனர். ஆனால் பினுவும் அவரது கூட்டாளிகளும் திருவள்ளூர் மாவட்டத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
கரூரில் மாதவன் கைது
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட போலீஸார், 3 ரவுடிகளையும் பிடிக்க தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கரூரில் ரவுடி பினுவின் நண்பர் மாதவனை சுற்றி வளைத்த போலீஸார் அவரிடம் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு விட்டு அவரை விடுவித்தனர். எனினும் மாதவனை ரகிசயமாக கண்காணிக்கவும் போலீஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.