ஆண்களை துணைக்கு வைத்துக் கொண்டு கோலம் போடவும்.. பெண்களுக்கு போலீஸ் அட்வைஸ்!
புதுக்கோட்டை: மார்கழி மாதத்தில் காலையில் வீட்டுக்கு முன்பு கோலம் போடும் பெண்களிடம் சங்கிலிப் பறிப்புத் திருடர்கள் கைவரிசை காட்டி வருவது அதிகரித்து வருவதால் கோலம் போடும் பெண்களுக்கு புதுக்கோட்டை போலீஸார் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
மார்கழி மாதத்தி்ல் காலையில் எழுந்து வண்ண வண்ணக் கோலம் போடுவது தமிழகத்தில் வழக்கமானது. அதிகாலை நேரத்தில் தொடங்கி காலை வரை இந்த கோலம் போடும் படலம் சுறுசுறுப்பாக நடக்கும்.
சென்னை நகரில் முதல் நாள் இரவிலேயே கோலம் போட்டு முடித்து விடுவார்கள். ஆனால் தென் மாவட்டங்களில் பெரும்பாலும் காலையில்தான் கோலம் போடுவார்கள். உண்மையில் இந்த காலை நேரத்தில் கோலம் போடுவதுதான் சிறந்தது. காரணம், மார்கழி மாதத்தில், அதாவது டிசம்பர் மாதத்தில் காலையில் ஓஸோன் அளவு அதிகமாக இருக்கும். அது உடலுக்கு நல்லது என்பதால் காலையில் கோலம் போடுவது ஆரோக்கியமானதும் கூட.
ஆனால் இந்த மார்கழி மாத கோலம் போடும் படலத்தில் திருடர்கள் புகுந்து கைவரிசை காட்டுவது அதிகரித்து வருகிறது. காலையில் கோலம் போடும் பெண்களிடம் சங்கிலிப் பறிப்பில் பலர் ஈடுபடுகிறார்கள்.
இதையடுத்து 6 கட்டளைகள் அடங்கிய துண்டு பிரசுங்களை புதுக்கோட்டை நகரில் பொது மக்கள் மத்தியில் போலீசார் விநியோகித்து வருகின்றனர். அதில்,
- அதிகாலை நேரங்களில் பெண்கள் கோலம் போடுவதை தவிர்த்து நன்றாக விடிந்த பின் சூரிய வெளிச்சம் வந்த பின் கோலம் போடவும்.
- அதிகாலை நேரங்களில் கோலம் போடும் சூழ்நிலை ஏற்பட்டால் துணைக்கு வீட்டு ஆண்களை உடன் வைத்துக் கொள்ளவும்.
- சேலை அல்லது துப்பட்டா மூலம் கழுத்தை சுற்றி பாதுகாப்பாக போட்டுக் கொள்ளவும். வீட்டு வாசலில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
- இரண்டு சக்கர வாகனத்திலோ, நடந்தோ சந்தேகப்படும் படியான நபர்கள் வந்தாலோ, முகவரியோ, குடிக்க தண்ணீர் கேட்டாலோ எச்சரிக்கையாக இருக்கவும், அதோடு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும். பனிக்குல்லா மற்றும் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் யாரேனும் வந்தால் உஷாராக இருக்கவும்.
- சந்தேகம் ஏதும் இருந்தாலோ, சம்பவம் நடந்தாலோ உடனே அவரச போலீஸ் எண் 100 அல்லது புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறை எண் 04322- 222236 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளவும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.