ஸ்கேன் செய்ய வந்த பெண் நோயாளியின் 4 பவுன் செயினோடு நர்ஸ் மாயம்... போலீஸ் விசாரணை
கோவை: ஸ்கேன்" செய்வதற்கு சென்ற பெண் நோயாளியின் தங்க நகையுடன் தலைமறைவான நர்சைப் போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, போத்தனூர், எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த இப்ராகீம் என்பவரின் மனைவி சைனாபா (25). இவர் கடந்த மாதம் 29-ஆம் தேதி தன்னுடைய வீட்டிலிருந்து கடைவீதிக்கு சென்று கொண்டிருந்த சைனாபா திடீரென மயங்கினார். உடனடியாக சிகிச்சைக்காக சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் சைனாபா.
திடீர் மயக்கத்தின் காரணம் அறிய அவருக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பார்வதி என்ற நர்ஸ், சைனாபாவை ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது ‘ஸ்கேன்' செய்கையில் தங்க நகைகள் அணிந்திருக்கக் கூடாது எனக் கூறிய பார்வதி, சைனாபா அணிந்திருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை தான் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறி வாங்கியுள்ளார்.
ஆனால், ஸ்கேன் முடிந்து வெளியே வந்த சைனாபா, நர்ஸ் பார்வதி மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார் சைனாபா.
அதனைத் தொடர்ந்து மாயமான நர்ஸ் பார்வதியைப் போலீசார் தேடி வருகின்றனர்.